ADDED : பிப் 02, 2026 03:06 AM

சென்னை: தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட 642 துணை சுகாதார நிலையங்களை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.
தமிழகத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப, 642 நகர மற்றும் கிராம துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கிராமங்களில் 617, நகரங்களில் 25 துணை சுகாதார நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சென்னை அடுத்த ஆவடி, அயப்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தை, நேற்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் நாசர், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழகத்தில் பொது சுகாதாரத்துறையின் அடித்தளமாக விளங்குவது, துணை சுகாதார நிலையங்கள். தமிழகம் முழுதும் 5,000 மக்கள் தொகையின் அடிப்படையில் 642 துணை சுகாதார நிலையங்கள், ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் இருந்து திறக்கப்பட்டு உள்ளன.
ஏற்கனவே, 8,713 துணை சுகாதார நிலையங்கள் பயன்பாட்டில் உள்ளன.
மருத்துவர்கள் போராட்டம் தொடர்பாக, நான்கரை ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்ட முறை பேச்சு நடத்தி, ஏராளமான சலுகைகள் வழங்கி உள்ளோம்.
தற்போது போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களை அழைத்து பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

