ரூ.7 லட்சம் மோசடி:திருப்பூர் மேயரின் மைத்துனர் கைது
ரூ.7 லட்சம் மோசடி:திருப்பூர் மேயரின் மைத்துனர் கைது
ADDED : செப் 09, 2011 02:08 AM
திருப்பூர்:திருப்பூரில், பனியன் நிறுவன உரிமையாளரிடம், ஏழு லட்ச ரூபாயை மிரட்டிப் பறித்து மோசடி செய்ததாக, மேயரின் மைத்துனரை போலீசார் நேற்று கைது செய்தனர்.பல்லடம், சின்னவடுகபாளையத்தைச் சேர்ந்தவர் கதிரேசன்; இவரின் மகன் கோகுல சரவணன்.
இவர், கே.செட்டிபாளையத்தில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில், சக்திவேல், வசந்தகுமார் ஆகியோர், பங்குதாரர்களாக உள்ளனர்.
ஆலாங்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து; சாய ஆலை உரிமையாளர். பனியன் துணிகளுக்கு சாயமிட்ட வகையில், கோகுல சரவணன், மாரிமுத்துவுக்கு ஏழு லட்ச ரூபாய் தர வேண்டியிருந்தது.
கோகுல சரவணன் கொடுத்த இரு காசோலைகளை, வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லாமல் திரும்பின. இதனால், இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
இதற்குத் தீர்வு காணும் முயற்சியில், கோகுல சரவணன், தன் நண்பர் பாலகிருஷ்ணன் என்பவருடன், மாநகர தி.மு.க., அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். மேயர் செல்வராஜின் மைத்துனரும், 36வது வட்ட தி.மு.க., செயலருமான கணேசனிடம் இதுகுறித்துப் பேசினர். இரு தரப்பினரையும் அவர் அழைத்துப் பேசியுள்ளார்.
கடந்த 2010, அக்., 29ம் தேதி, இரு நபர்களை அனுப்பி, அவர்கள் மூலம் கோகுல சரவணனை பலவந்தமாக மாநகர தி.மு.க., அலுவலகத்துக்கு அழைத்து வரச் செய்த கணேசன், மாரிமுத்துவுக்குத் தர வேண்டிய பணத்தை உடனடியாகத் தருமாறு கேட்டு மிரட்டியுள்ளார்.
வசந்தகுமார் மற்றும் பாலகிருஷ்ணன் மூலம், ஏழு லட்ச ரூபாயை கொண்டு வரச்செய்து, அப்பணத்தை கணேசனுக்கு கோகுல சரவணன் கொடுத்துள்ளார். அத்தொகையை மாரிமுத்துவுக்குத் தராமல், கணேசன் வைத்துக் கொண்டார்.
இந்நிலையில், மாரிமுத்து திருப்பூர் கோர்ட்டில் கோகுலசரவணன் மீது, காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். மாரிமுத்துவுக்குத் தர வேண்டிய ஏழு லட்ச ரூபாயை கொடுத்தும், அப்பணத்தை மாரிமுத்துவுக்குத் தராமல் மோசடி செய்த கணேசன் மீது, திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவில் கோகுல சரவணன் புகார் செய்தார்.
நேற்று காலை 11.40 மணிக்கு, திருப்பூர் மாநகர தி.மு.க., அலுவலகத்தில் இருந்த கணேசனை, டி.எஸ்.பி., மற்றும் போலீசார் கைது செய்தனர். மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணை நடத்திய பிறகு, திருப்பூர் ஜே.எம்., கோர்ட் எண் 1ல் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

