75 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
75 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ADDED : ஜூன் 25, 2024 11:10 AM

சென்னை: 2026ம் ஆண்டு ஜனவரிக்குள் காலியாக இருக்கும் 75 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது: இளைஞர்களின் நேர்மையை மனதில் வைத்து திட்டங்களை தீட்டுவதே இந்த திராவிட மாடல் அரசு. வளமான அரசாக, அமைதியான அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அடுத்த தேர்தலை அல்ல, அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கும் அரசுதான் திராவிட மாடல் அரசு.
பணி நியமனம்
கடந்த 3 ஆண்டுகளில் 65,483 இளைஞர்களுக்கு அரசுப்பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அரசுத்துறைகள் மட்டுமல்லாமல், பெருந்தொழில், சிறு, குறு நிறுவனங்கள் மூலமாகவும் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி தந்திருக்கிறோம். கடந்த 3 ஆண்டுகளில் அமைப்பு சார்ந்த தனியார் துறைகளில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் குறித்த புள்ளி விவரங்கள் மத்திய அரசின் மூலம் பெறப்பட்டன. இந்த தரவுகளின்படி 77.78 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
காலி பணியிடங்கள்
வரும் 2026 ஜனவரிக்குள் (18 மாதங்களில்) பல்வேறு அரசு பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி மூலமாக 17,595 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19,260 பணியிடங்களும், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3,041 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6,688 பணியிடங்களும் நிரப்பப்படும். அதாவது 46,584 பணியிடங்கள் நிரப்பப்படும். இது தவிர மற்ற துறைகளில் காலியாக உள்ள 30,219 பணியிடங்களும் நிரப்பப்படும். மொத்தத்தில் 2026 ஜனவரிக்குள் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு சட்டசபையில் ஸ்டாலின் கூறினார்.