ADDED : பிப் 04, 2024 02:28 AM

சென்னை: சிலை கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்த போது, அவரிடமிருந்து எட்டு உலோக சிலைகள் கைப்பற்றப்பட்டன.
திருச்சி சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சிலை கடத்தல் குற்றவாளி லட்சுமி நரசிம்மனை தேடி வந்தனர்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம், குச்சிக்காடு பகுதியில் பதுங்கியிருந்த அவரை கைது செய்தனர்.
லட்சுமி நரசிம்மனுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், அவரது 'சதர்ன் ஆர்ட்ஸ் அண்டு கிராப்ட்ஸ்' குடோனில் எட்டு உலோக சிலைகள் இருந்தன.
அருணாசலேஸ்வரர், கேரள விஷ்ணு, அய்யனார், புத்தர், தவழும் கிருஷ்ணர் இரண்டு சிலைகள், நந்தி, நடமாடும் கிருஷ்ணர் என, எட்டு சிலைகளுக்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அவை கைப்பற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து, லட்சுமி நரசிம்மன் மீது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், புதிய வழக்குகளிலும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிலை திருட்டில் தொடர்புடையவரை கண்டுபிடித்த சிலை தடுப்பு பிரிவு திருச்சி சரக இன்ஸ்பெக்டர் இந்திரா மற்றும் அவரது குழுவினரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., சைலேஷ் குமார் யாதவ் பாராட்டினார்.