90 நாட்கள் கெடாத ஆவின் பால் நிறுத்தம்; பருவமழை காலத்தில் நுகர்வோர் ஏமாற்றம்
90 நாட்கள் கெடாத ஆவின் பால் நிறுத்தம்; பருவமழை காலத்தில் நுகர்வோர் ஏமாற்றம்
ADDED : அக் 21, 2024 04:21 AM

சென்னை: பேரிடர் உள்ளிட்ட அவசர காலங்களில் பயன்படுத்தப்படும், 90 நாட்கள் கெடாத ஆவின் பால் பாக்கெட் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது, நுகர்வோரிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆவின் சார்பில் தினமும், 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதை கொழுப்பு சத்து அடிப்படையில் பிரித்து, ஆரஞ்ச், பச்சை, நீலம், பிங்க் நிற பாக்கெட்டுகளில் அடைத்து, ஆவின் விற்பனை செய்கிறது.
பல கோடி ரூபாய் செலவு
ஊதா நிறத்தில் பசும் பால் விற்பனையும் நடக்கிறது. அது மட்டுமின்றி, பச்சை, வெள்ளை நிறம் கலந்த பாக்கெட்டில், 90 நாட்கள் கெடாத பால், 2022 நவம்பரில் அறிமுகமானது. இதை குளிர்சாதன பெட்டியில் வைக்காமல், திறந்தவெளியில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
பாலில் பாக்டீரியாக்கள் முழுதும் நீக்கப்பட்டதாலும், ஏழு லேயர் பாலிதின் பயன்படுத்தி பாக்கெட் உருவாக்கப்பட்டதாலும் பால் கெடுவதில்லை. இந்த பால் பாக்கெட் தயாரிக்க, சோழிங்கநல்லுார் பால் பண்ணையில், தினமும் ஒரு லட்சம் லிட்டர் பேக்கிங் செய்யும் திறன் உடைய கட்டமைப்பு வசதிகள், பல கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டன.
இந்த பாலில், 3.5 சதவீதம் கொழுப்பு, 8.5 சதவீதம் மற்ற சத்துக்கள் இருக்கும். தொலைதுார பயணம் செல்வோருக்கும், மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களிலும், இந்த பால் பாக்கெட் பெரிதும் உதவும் என்றும் ஆவின் நிறுவனம் கூறியது.
அதன்படி, கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலின் போது, இந்த பால் பாக்கெட்டுகள் பொதுமக்களுக்கு அதிக அளவில் கைகொடுத்தன.
லாபம்
பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவன கேன்டீன்களுக்கும், இந்த பால் பாக்கெட்டுகள் சப்ளை செய்யப்பட்டன. இந்த வகை பால், அரை லிட்டர், 30 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் ஆவினுக்கும் லாபம் கிடைத்தது.
இருப்பினும், இந்த பால் பாக்கெட் உற்பத்தியை, நஷ்டம் எனக்கூறி ஆவின் நிறுவனம் நிறுத்தி உள்ளது. கடந்த மழையின் போது, ஆவின் பாலகங்களில் இந்த பால் பாக்கெட்டுகளை கேட்டு, பொதுமக்கள் படையெடுத்தனர்.
ஆனால், பாக்கெட் இல்லாததால், பலரும் ஏமாற்றம் அடைந்தனர். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த பால் பாக்கெட்டுகளை, போதிய அளவில் உற்பத்தி செய்து இருப்பு வைக்க, புதிய பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல, பலகாரங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும், 500 மி.லி., உப்பு கலந்த வெண்ணையும் கையிருப்பில் இல்லை. இது, தீபாவளி நேரத்தில் பலகாரங்கள் தயாரிக்கும் இல்லத்தரசிகளுக்கு மட்டுமின்றி, வர்த்தக ரீதியாக அவற்றை பயன்படுத்துவோருக்கும், ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.