UPDATED : நவ 03, 2024 04:52 AM
ADDED : நவ 03, 2024 04:01 AM

தாரமங்கலம்: சேலம், சின்ன கொல்லப்பட்டியை சேர்ந்த கார்த்திக், 26. இவரது மனைவி ஈஸ்வரி, 26. இவர் குழந்தைப்பேறுக்கு, தாரமங்கலத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார். அவருக்கு பெண் குழந்தை பிறந்து, ஆதிரை என பெயர் சூட்டினர்.
குழந்தைக்கு, மூன்று மாதம் முடிந்ததும் பல்வேறு நாடுகளின் தேசியக்கொடிகளை காட்டி, ஈஸ்வரி பயிற்சி அளித்து வந்தார். தொடர் பயிற்சியால் நான்காவது மாதத்தில், 32 நாடுகளின் கொடியை, ஆதிரை சரியாக தொட்டு காட்டினார்.
இந்நிகழ்வை வீடியோவாக பதிவு செய்த ஈஸ்வரி, கடந்த அக்., 7ல், 'நோபல்' உலக சாதனை புத்தகத்துக்கு அனுப்பினார். இதை ஆராய்ந்து, 22ல் நோபல் உலக சாதனை புத்தகத்தில், ஆதிரையின் பதிவு இடம்பிடித்தது.
மேலும் ஆதிரைக்கு நோபல் உலக சாதனை சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டன. அதை, ஈஸ்வரி, அவரது குடும்பத்தினருடன் சென்று, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆகியோரிடம் காட்டி மகிழ்ந்தார்.