தமிழ் வழியில் படித்ததாக போலி சான்றிதழ்: டி.எஸ்.பி., உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு
தமிழ் வழியில் படித்ததாக போலி சான்றிதழ்: டி.எஸ்.பி., உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : அக் 08, 2024 12:48 AM

சென்னை: தமிழ் வழியில் பயின்றதாக, 'குரூப் - 1' தேர்வில் போலி சான்றிதழ் சமர்பித்து பணிக்கு சேர்ந்த, வணிக வரித்துறை உதவி கமிஷனர், போலீஸ் டி.எஸ்.பி., உட்பட ஒன்பது பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னுரிமை
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அரசு பணிகளில், 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் அரசு பணியாளர் தேர்வு வாரியம், 2019ல், நடத்திய குரூப் - 1 தேர்வில், தொலைநிலை கல்வியில் பயின்றவர்களும், தமிழ் வழியில் பயின்றதாக சான்றிதழ் வழங்கி, போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட பணிகளில் சேர்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
விசாரணைக்கு உத்தரவு
இது தொடர்பாக, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திராவ் என்பவர், அங்குள்ள உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில், குரூப் - 1 தேர்வில், தமிழ் வழியில் படித்ததாக, 22 பேர் சான்றிதழ் சமர்பித்து உள்ளனர்.
அவர்களில் நான்கு பேர், மதுரை காமராஜர் பல்கலையில் தொலைநிலை கல்வியில், தமிழ் வழியில் பட்டப்படிப்பை முடித்ததாக, போலி சான்றிதழ் சமர்ப்பித்து பணியில் சேர்ந்து உள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, மதுரை வணிக வரித்துறையில் உதவி கமிஷனராக பணிபுரியும் சொப்னா, சேலம் மாவட்டம் ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார், காஞ்சிபுரத்தில் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரியும் கலைவாணி.
மதுரை காமராஜர் பல்கலை முன்னாள் முதுநிலை கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, மதுரை காமராஜர் பல்கலையின், தொலைநிலை கல்விப்பிரிவு முன்னாள் கண்காணிப்பாளர் புருஷோத்தமன் உட்பட, ஒன்பது பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.