வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு: துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு: துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
ADDED : அக் 01, 2025 05:57 PM

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதனையடுத்து துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நேற்று மாலை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று( அக்.,01) காலை 8 : 30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது மேலும் வடக்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இது மேலும் வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் அக்.,3 ம் தேதி கரையை கடக்கக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டு
காற்றழுத்த தாழ்வு காரணமாக, எண்ணூர் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை ,காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களிலும் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.