ADDED : ஜன 16, 2024 06:51 AM
தாரமங்கலம் : சேலம் மாவட்டம் தாரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் முன் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு டாரஸ் லாரி தீப்படித்து எரிந்தது. இதிலிருந்து பரவிய தீயால் அருகில் நின்ற ஒரு டிப்பர் லாரியும் தீப்படித்து எரிந்தது.
ஓமலுார் நங்கவள்ளி தீயணைப்பு நிலைய வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஓமலுார் டி.எஸ்.பி. சங்கீதா தீயில் எரிந்த லாரிகளை பார்வையிட்டார். இது தொடர்பாக தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் டாரஸ் லாரியை அதன் டிரைவரான ரமேஷ் தீ வைத்து எரித்ததை கண்டுபிடித்தனர்.
போலீசார் கூறியதாவது:
தீயில் எரிந்த டாரஸ் லாரி பவளத்தானுாரை சேர்ந்த சுந்தரம் மனைவி பெயரில் உள்ளது. லாரியை வேலுார் அடுக்கம்பாறையை சேர்ந்த ரமேஷ் 36 ஓட்டி வந்தார்.
லாரியில் பொருட்களை ஏற்றிக்கொண்டு பல்லடம் சென்றவர் கடந்த 13ம் தேதி பவளத்தானுாரில் விட்டுள்ளார். அதன் பிறகு சொந்த ஊர் செல்ல சுந்தரத்திடம் தன் சம்பளத்தில் முன்பணமாக 19000 ரூபாய் கேட்டுள்ளார்.
நேற்று முன்தினம் தருவதாக கூறிய நிலையில் ரமேஷ் சென்றுள்ளார். ஆனால் 1000 ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளார். ஆத்திரமடைந்த ரமேஷ் மது குடித்துள்ளார். பவளத்தானுாரில் ஒரு பெட்ரோல் பங்க்கில் நிறுத்தியிருந்த லாரியை எடுத்து வந்து ஸ்டேஷன் முன் நிறுத்தி துணியை சுற்றி லாரி டீசல் டேங்கில் போட்டு எரித்துள்ளார். சுந்தரம் புகாரின்படி ரமேஷை நேற்று கைது செய்தோம்.
இவ்வாறு கூறினர்.