ADDED : டிச 04, 2024 01:39 AM
சென்னை:தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் அறிக்கை:
ஒவ்வொரு ஆண்டும் புயல் மற்றும் பேரிடரின் போது, பாதிக்கப்பட்ட மக்கள் சிலரை, ஆட்சியாளர்கள் சந்தித்து போட்டோ எடுத்துவிட்டு, தற்காலிக நிவாரணம் கொடுப்பதுதான் தீர்வா.
அந்த நேரத்துக்கான, தீர்வை தந்துவிட்டதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும், மக்கள் துன்பத்தை ஒருநாள் சம்பிரதாயம் போல நினைத்து, அன்றோடு மறந்துவிடுவதும் எந்த வகையில் நியாயம்.
மக்களை பாதுகாக்க, நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்வது குறித்து, அவர்கள் எள்ளளவும் சிந்திப்பதில்லை. காலநிலை மாற்றம், பேரிடர் பாதுகாப்பு சார்ந்து, எந்த முன்னெடுப்பையும் எடுப்பதில்லை. வெறும் தற்காலிக கண்துடைப்பு அறிவிப்புகளை செய்வதில் மட்டுமே, முனைப்புடன் இருக்கின்றனர்.
இவ்வாறு செய்வதையே ஆட்சியாளர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
எது நடந்தாலும், எப்போதும் போல் எதிர்க்கட்சிகள் மீது ஏளனமாக விமர்சனம் வைத்து, காவி வண்ணம் பூசி, கபட நாடகமாடி தப்பித்துக் கொள்ளலாம் என்று, தற்போதைய ஆட்சியாளர்கள், மக்களை நிரந்தர நிர்கதிக்கு ஆளாக்கி வருகின்றனர்.
இதெல்லாம், மக்கள் சக்திக்கு முன்பு தோற்றுப் போகும்.
பல மாவட்டங்களில் வெள்ள நீர் வடியவில்லை. இதனால் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும், வெள்ள நீர் முழுதும் வடியும் வரை, பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க வேண்டும்.
இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
இதனிடையே, சென்னையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட, 300 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு, அரிசி, மளிகைப் பொருட்கள், வேட்டி, சேலை, போர்வை உள்ளிட்டவற்றை, பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், விஜய் வழங்கினார்.