UPDATED : ஜன 02, 2026 02:26 AM
ADDED : ஜன 02, 2026 02:06 AM

வரும் சட்டசபை தேர்தலில், த.வெ.க.,வுடன் கூட்டணி என காங்கிரஸ் முடிவு எடுக்குமானால், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தலைமையில், காங்கிரஸ் ஜனநாயக பேரவை மீண்டும் உதய மாகும் என்றும், தி.மு.க., வுடன் அக்கட்சி கூட்டணி அமைக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
வரும் தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, காங்கிரஸ் மேலிடம் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய நிபந்தனைகளை விதித்து வருகிறது. 'ஆட்சியில் பங்கு, அதிக சீட்' என, அக்கட்சி குரல் கொடுத்து வருகிறது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தபட்ச செல்வாக்கு கூட இல்லை என்பதால், அக்கட்சி வலியுறுத்தும் கோரிக்கைகளை ஏற்க தி.மு.க., மேலிடம் விரும்பவில்லை.
தமிழக பா.ஜ.,வை விட குறைவாக, அதுவும் சொற்ப அளவிலான ஓட்டு வங்கியே காங்கிரசுக்கு இருக்கிறது. அதனால், 'அக்கட்சியின் உறவுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்' என்று, வி.சி., - ம.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும், தி.மு.க.,வுக்கு அழுத்தம் கொடுக்கின்றன.
ஆனாலும், தேசிய அளவில் பா.ஜ.,வை எதிர்த்து அரசியல் செய்ய காங்கிரஸ் உறவு அவசியம் என்பதால், தி.மு.க., தலைமை தயக்கம் காட்டி வருகிறது. இந்த நேரத்தில், த.வெ.க., தரப்பில் காங்கிரசுக்கு தொடர் அழைப்பு விடப்பட்டு வருகிறது.
அதோடு, 'ஆட்சியில் பங்கு கொடுக்கப்படும்' என விஜய் காட்டிய ஆசை, தமிழக காங்கிரஸ் கோஷ்டிகளையும், அக்கட்சி மேலிடத்தையும் ஆட்டி படைக்கிறது. அதனால், த.வெ.க., தலைவர் விஜயை ரகசியமாக சந்தித்து பேசுவதும், தி.மு.க., அரசை விமர்சிப்பதுமாக காங்கிரசில் இருப்போர் சிலரின் போக்கு மாறி உள்ளது.
அதேநேரம், 'விஜய் விரிக்கும் வலையில் விழுந்து தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறுவது தற்கொலை முயற்சி' என, சிதம்பரம் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர். விஜயோடு மேடை ஏறி அரசியல் செய்ய அவர்கள் அறவே விரும்பவில்லை. அதனால், காங்கிரஸ் மேலிடம் அதுபோன்ற முடிவு எடுத்தால், சிதம்பரம் தலைமையில் மீண்டும் 'காங்கிரஸ் ஜனநாயக பேரவை' உருவாகும் என பேசப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தி.மு.க., ஆதரவு தலைவர்களும், சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்களோடு அணி சேருவதால், தமிழக காங்கிரஸ் இரண்டாக உடைவது உறுதியாகி உள்ளது.
இதற்கிடையில், புத்தாண்டை ஒட்டி முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சிலர் நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிதம்பரம் ஆதரவாளர்கள் கூறியதாவது: மத்திய அரசில் 19 ஆண்டுகள் முக்கிய இலாகாக்க ளின் அமைச்சராக கோலோச்சியவர் சிதம்பரம். தற்போது, ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். அவரது பதவிக்காலம் வரும் 2027ல் முடிகிறது. மீண்டும் அவர் ராஜ்யசபா எம்.பி.,யாக தி.மு.க., ஆதரவு தேவை.
எனவே, தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்க வேண்டும் என தனிப்பட்ட முறையில் விரும்புகிறார். ஒருவேளை, த.வெ.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் முடிவை டில்லி மேலிடம் எடுக்குமானால், சிதம்பரம் தலைமையில் காங்கிரஸ் கட்சி உடைய வாய்ப்புள்ளது.
கடந்த 2001ல், த.மா.கா.,வின் அப்போதைய தலைவர் மூப்பனாரை எதிர்த்து, 'காங்கிரஸ் ஜனநாயக பேரவை' என்ற அமைப்பை சிதம்பரம் துவக்கினார். தி.மு.க.,வுடன் காங்கிரஸ் ஜனநாயக பேரவை கூட்டணி அமைத்து வள்ளல்பெருமான், ரங்கநாதன் என இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றனர்.
தற்போது, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் சிதம்பரம் உறுதியாக இருக்கிறார். மேலிட தலைவர்களை சந்தித்து பேசி தன் கருத்தை வலியுறுத்த உள்ளார். அதன் பின்பும் காங்., தலைமை விஜயுடன் கூட்டணி அமைப்பதில் உறுதியாக இருந்தால், தனித்து முடிவெடுக்க சிதம்பரம் திட்டமிட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

