'மாணவர்கள் இல்லாத பாடத்துக்கு ஆசிரியரை நியமிக்க முடியாது'
'மாணவர்கள் இல்லாத பாடத்துக்கு ஆசிரியரை நியமிக்க முடியாது'
ADDED : மே 18, 2025 02:38 AM

சென்னை: மாணவர்கள் இல்லாத பாடத்துக்கு ஆசிரியர் நியமிக்கும்படி உத்தரவிட முடியாது என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆசிரியர் நியமனம் வழங்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, ஆசிரியர் தேர்வு வாரியம், 2021 செப்., 9ம் தேதி அறிவிப்பு வெளியிட்டுஇருந்தது.
இதில், 'பயோ கெமிஸ்ட்ரி' பாட ஆசிரியர் பணிக்கு, இந்திரா என்பவர் விண்ணப்பம் செய்தார். தேர்வு நடைமுறைகளில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்ற போதும், இறுதி அறிவிப்பாணையில், இந்திரா விண்ணப்பித்த பதவி இடம்பெறவில்லை.
இதையடுத்து, இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து, தனக்கு பணி நியமனம் வழங்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்திரா வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, இந்திரா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.நீலகண்டன் ஆஜராகி, ''பயோ கெமிஸ்ட்ரி பாடத்துக்கு மாணவர்கள் இல்லாததால், இந்த பாடத்துக்கான ஆசிரியர் பணியிடம் நீக்கப்பட்டு விட்டது.
''அறிவிப்பாணை வெளியிடும்போது, சம்பந்தப்பட்ட பணியிடத்துக்கான விபரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளன,'' என்றார்.
இதை ஏற்ற நீதிபதிகள், 'பாடம் நடத்துவதற்கு மாணவர்கள் இருக்க வேண்டும். காலி இருக்கைகளுக்கு மனுதாரர் பாடம் நடத்த முடியாது. மாணவர்கள் இல்லாத பாடத்துக்கு ஆசிரியர் நியமிக்கும்படி உத்தரவிட முடியாது' எனக்கூறி, மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.