ADDED : ஏப் 15, 2025 02:27 PM

சென்னை: ''துணைவேந்தர் நியமனத்தில் காலம் காலமாக இருந்த முறையை திடீரென்று மாற்ற வேண்டிய அவசரம் என்ன? இந்த மாற்றம் உயர்கல்வியில் சுனாமியைப் போல் தாக்கியிருக்கிறது. இந்த மாற்றத்தால், பல்கலை நிர்வாகத்தில் அரசியல் தலையீடு ஏற்படும்,'' என்று பேராசிரியர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ.பாலகுருசாமி வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டசபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட பத்து பல்கலைக்கழக சட்டமுன்வடிவுகளுக்கு கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் இசைவு தெரிவிக்க வகை செய்யும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்திய உயர்கல்வி வரலாற்றில் ஒரு மைல்கல்.
ஆனால், இந்தத் தீர்ப்பு தமிழகத்தில் பல்கலைக்கழக நிர்வாகம், உயர்கல்வியின் தரம் ஆகியவற்றில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும்.
இத்தீர்ப்பின்படி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை அரசே நியமிக்கலாம். அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தால், பதவி நீக்கமும் செய்யலாம். இதுவரை இந்த அதிகாரங்கள் பல்கலைக்கழகங்களின் வேந்தரான கவர்னரிடமே இருந்தன. இப்போதும் கவர்னரே வேந்தராக நீடிக்கிறார். ஆனால், பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கும் கவர்னருக்கு துணைவேந்தர் நியமனத்தில் எந்த உரிமையும் இல்லை என்ற விநோதமான நிலை உருவாகியிருக்கிறது.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை வேந்தராக இருக்கும் கவர்னரே நியமிக்கும் நடைமுறை நாடு முழுவதும் பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. இந்நடைமுறை அரசியல் குறுக்கீடுகளால் நேரும் ஆபத்தைத் தடுப்பதற்காக அமைந்தது. இந்நிலையில், காலம் காலமாக ஆய்வு செய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட முறையை திடீரென்று மாற்ற வேண்டிய அவசரம் என்ன? இந்த மாற்றம் உயர்கல்வியில் சுனாமியைப் போல் தாக்கியிருக்கிறது. இதைத் தொடர்ந்து, பல்கலை நிர்வாகத்தில் அரசியல் தலையீடு ஏற்படும்.
இது, மாநிலத்தின் உயர்கல்வியில் அனைத்து அம்சங்களையும் முழுமையாகச் சிதைத்துவிடும். இந்த விளைவுகளையெல்லாம் உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லையோ என நினைக்க வேண்டியிருக்கிறது. ஒரு வேளை, அரசு நிறைவேற்றிய சட்ட முன்வடிவுகளை கவர்னர் நீண்ட காலமாகக் கிடப்பில் போட்டதை மட்டும் கவனத்தில் கொண்டிருக்கக் கூடும்.
துணைவேந்தர்களை யார் நியமிக்கிறார்கள் என்பது உண்மையிலேயே முக்கியமானது அல்ல. ஒருவர் பெயர்பெற்றவராக, நேர்மையானவராக, அனுபவம் உள்ளவராக, தலைமைப் பண்புள்ளவராக, தகுதியானவராக இருந்தால், அவரைத் துணைவேந்தராக நியமிப்பது ஏற்புடையது. உயர்கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பின் நியமனத்தில் எந்த நடைமுறையைப் பின்பற்றினாலும், அரசியல் குறுக்கீடு இல்லாமல் இருக்க வேண்டும்.
அதன் மூலம் ஊழல், உற்றார், உறவினருக்கு ஆதாயம் செய்தல், சலுகை காட்டுதல் ஆகியவை தடுக்கப்பட வேண்டும். துணைவேந்தர் நியமனங்களில் கடந்த காலங்களில் இருந்தது போல் ஊழல், உற்றார், உறவினருக்கு ஆதாயம் செய்தல், சலுகை காட்டுதல் ஆகியவை அமைந்துவிட்டால், தமிழகத்தின் பல்கலைக்கழகங்களின் சுதந்திரம், நேர்மை ஆகியவை பெருமளவுக்கு சிதைந்துவிடும். இது, ஏற்கெனவே, மோசமான நிலையில் இருக்கின்ற உயர்கல்வியின் தரத்தையும் ஆராய்ச்சியின் தரத்தையும் சீர்குலைக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் பேராசிரியர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.