ADDED : பிப் 04, 2024 02:27 AM
சென்னை: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க செயலர் ரவீந்திரநாத் கூறியதாவது:
தமிழகத்தில் சிறு, குறு அளவிலான ரத்தப் பரிசோதனை மையங்கள் உள்ளன. இவை, முறைப்படி பதிவு செய்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய சான்றிதழ் பெற்றுள்ளன. இந்த ஆய்வகங்களில் தரமற்ற முறையில் ரத்தப் பரிசோதனை செய்யப்படுவதாக தகவல் பகிரப்படுகிறது. இவற்றை, அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
இந்தியாவில், 8 நிமிடத்திற்கு ஒரு பெண் கருப்பை வாய் புற்றுநோயால் உயிரிழந்து வருகிறார். இப்புற்றுநோய் ஏற்பட, 'கியூமன் பேப்பிலோமா' வைரஸ்களே, 75 சதவீதத்திற்கு மேல் காரணமாக உள்ளன.
இந்த வைரஸ்களுக்கு எதிராக, 'ஹெச்.பி.வி., தடுப்பூசியை வழங்குவதன் வாயிலாக, வைரஸ்களால் ஏற்படும் கருப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.
உலகில், 100க்கும் மேற்பட்ட நாடுகள் தடுப்பூசி போட்டு, அப்புற்றுநோயை கட்டுப்படுத்தி வருகின்றன. இந்தியாவில், 9 வயது முதல் 14 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவது ஊக்கப்படுத்தப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஊக்கப்படுத்துதல் மட்டும் போதாது; அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக தடுப்பூசியை போட மத்திய அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.