அபுதாபி நிறுவன இன்ஜினியர் விபத்தில் பலி; ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க மக்கள் நீதிமன்றம் உத்தரவு
அபுதாபி நிறுவன இன்ஜினியர் விபத்தில் பலி; ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க மக்கள் நீதிமன்றம் உத்தரவு
ADDED : டிச 20, 2024 07:32 AM

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்து வழக்கில் உயிரிழந்த இன்ஜினியர் குடும்பத்திற்கு 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க, சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் முனியப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கவுதம், 35. இவர் துபாயில் உள்ள அபுதாபியில் இன்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுஸ்மிதா என்ற மனைவியும், 9 வயதில் யாஷ்வினி என்ற மகளும் உள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்டு, 29ம் தேதி அவரது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மகனை பார்க்க ஆகஸ்டு, 30ம் தேதி துபாயில் இருந்து கவுதம் வந்தார்.
செப்.,12ம் தேதி நாமக்கல்லில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்த கவுதம், மகளை பள்ளியில் கொண்டு விடுவதற்காக ஸ்கூட்டரில் சென்றார். நாமக்கல்- திருச்சி சாலை, நாகராஜபுரம் பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் கவுதம் ஓட்டி சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கவுதம் பரிதாபமாக இறந்தார்.
நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கவுதம் குடும்பத்தினர் இழப்பீடு கோரி நாமக்கல் மோட்டார் வாகன விபத்து காப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். நேற்று நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்ற விசாரணைக்கு இந்த வழக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
ஓய்வுபெற்ற நீதிபதி நல்லதம்பி, வக்கீல்கள் அய்யப்பன், சங்கர் ஆகியோர் சமரசம் செய்து தீர்வு ஏற்படுத்தினர். இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் இறந்து போன கவுதம் குடும்பத்திற்கு, 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
இதை கவுதம் குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டதால், இந்த வழக்கில் சமரச தீர்வு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, 5 கோடி ரூபாய் இழப்பீடு தொகை பெறுவதற்கான உத்தரவை மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி, இறந்து போன கவுதம் குடும்பத்தினரிடம் வழங்கினார். அப்போது மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான வேலுமயில் உடன் இருந்தார்.
வக்கீல் வடிவேல் கூறுகையில், இறந்து போன கவுதம் மாதம் ஒன்றுக்கு இந்திய ரூபாய் மதிப்புபடி, 3.25 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி வந்தார். அந்த அடிப்படையில், 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சமரசம் ஆகி உள்ளது. தமிழக அளவில் விபத்து வழக்கு ஒன்றில், 5 கோடி ரூபாய் இழப்பீடு கொடுத்து சமரசம் ஏற்படுத்தப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை என்றார்.