மனிதவள மேம்பாட்டில் தனி கவனம்: முதல்வருக்கு சாதனையாளர் விருது
மனிதவள மேம்பாட்டில் தனி கவனம்: முதல்வருக்கு சாதனையாளர் விருது
ADDED : அக் 08, 2024 12:51 AM

சென்னை: மனிதவள மேம்பாட்டில் தனி கவனம் செலுத்தியதால், முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு உள்ளது.
ஆசிய மனிதவள மேம்பாட்டு விருது அமைப்பு சார்பில், நேற்று இந்த விருது வழங்கப்பட்டது. தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஆசிய மனிதவள மேம்பாட்டு விருது அமைப்பின் நிறுவனரும், சைபர் ஜெயா பல்கலை இணை வேந்தருமான டத்தோ பாலன் கூறியதாவது:
இதற்கு முன், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பிடல் வி.ராமோஸ், போஸ்னியாவின் பிரதமர் ஹாரிஸ் சிலாய்ஜிச், மலேஷியா நாட்டின் சராவக் முதல்வர் அடேனம் சதேம் போன்ற தலைவர்களுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்தியாவில், 12 ஆண்டுகளுக்கு பின், இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த விருதுடன் சர்வதேச அளவிலான மாநாடு இரண்டு நாட்கள் சென்னையில் நடக்கிறது.
இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 350 மனிதவள மேம்பாட்டு நிபுணர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் மனிதவள மேம்பாட்டு துறையில், முதல்வர் ஸ்டாலின் என்னென்ன செய்திருக்கிறார் என்பதை ஆய்வு செய்து, இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக, பல லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. வேலைவாய்ப்புகளை அதிகரித்து இருக்கின்றனர். இதனால், தமிழக இளைஞர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து உள்ளது.
கல்வி மற்றும் மனிதள வள மேம்பாடு தான் வறுமையை ஒழிக்கும் என்பதை விருது வழங்கும் குழு உறுதியாக நம்புகிறது. இதற்காகவே நடப்பாண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது, முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.