பைக் டாக்ஸி மீது நடவடிக்கை; புதிய கட்டுப்பாடுகள் அமைச்சர் சொன்ன விளக்கம் இதுதான்!
பைக் டாக்ஸி மீது நடவடிக்கை; புதிய கட்டுப்பாடுகள் அமைச்சர் சொன்ன விளக்கம் இதுதான்!
ADDED : டிச 11, 2024 01:23 PM

சென்னை: 'தமிழகத்தில் பைக் டாக்ஸி இயக்கலாம், ஆனால் விதி மீறலில் ஈடுபடக் கூடாது' என போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
வணிக நோக்கத்துக்காக (பைக் டாக்ஸி) பயன்படுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மண்டல மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
பைக் டாக்ஸி விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு பைக்குகளை வாடகை ரீதியாக இந்தியா முழுவதும் பயன்படுத்த அனுமதித்துள்ளது. இது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
பைக் டாக்ஸிக்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து வருகிறோம். பைக் டாக்ஸி பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. அதே சமயம் ஆட்டோ டிரைவர்கள் பாதிக்கப்படுவதாகவும் கருத்து நிலவுகிறது.
பைக் டாக்ஸிக்கு ஒரு புறம் வரவேற்பு, மறுபுறம் எதிர்ப்பு இருந்தாலும் இதில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு கருதியே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
சிறு விபத்து ஏற்பட்டால் கூட நீதிமன்றத்தில் நிவாரணம் மறுக்கப்படுகிறது.
விதிமுறைகள் என்ன?
தமிழகத்தில் பைக் டாக்ஸி இயக்கலாம். ஆனால் விதி மீறலில் ஈடுபடக் கூடாது.
வாகனத்துக்கு இன்சூரன்ஸ் இருக்க வேண்டும். டிரைவருக்கு லைசென்ஸ் இருக்க வேண்டும். வாகனம் எப்படி பதிவு செய்யப்பட்டு உள்ளதோ அதன்படி மட்டுமே இயக்கப்பட வேண்டும். சிறுவிபத்து ஏற்பட்டாலும் பின்னால் அமர்ந்து இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் வந்து விட கூடாது. மோட்டார் வாகன சட்டத்தின் அனைத்து விதிமுறைகளும் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.