ADDED : பிப் 19, 2026 01:34 AM
சென்னை: புகைப் பிடிப்பதை நிறுத்த, குட்கா மற்றும் புகையிலை மெல்லும் பழக்கத்தை நிறுத்த, வாயில் சுவைக்கும் 'நிக்கோடின் பவுச்' பயன்படுத்துகின்றனர். நம் நாட்டில், இது அனுமதிக்கப்படவில்லை. இணையதளங்கள் வாயிலாக, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சட்டவிரோத விற்பனை தொடர்பாக, சம்பந்தப்பட்ட இணையதள நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. எனவே, வாயில் சுவைக்கும் 'நிக்கோடின் பவுச்' பயன்படுத்துவதை, பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
இந்த தயாரிப்புகளை, வாயில் சுவைக்கும்போது, நிக்கோடின் ரத்த ஓட்டத்தில் நேரடியாக கலக்கிறது. கட்டுப்பாடற்ற நிக்கோடின் நுகர்வு மற்றும் அதிகப்படியான நிக்கோடின் உட்கொள்ளல், மோசமான உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தும். உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், இணையதள சந்தை நடத்துவோர், வினியோகஸ்தர்கள், மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள், அங்கீகரிக்கப்படாத வாயில் வைக்கும் 'நிக்கோடின் பவுச்' உற்பத்தி செய்தல், சேமித்து வைத்தல், விற்பனைக்கு காட்சிப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
***

