ADDED : ஜன 13, 2024 01:43 AM
சென்னை:சென்னை சைதாப்பேட்டையில் 'மக்களுடன் முதல்வர்' திட்டம் மற்றும் 1014 சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சிகளை துவக்கி வைத்த அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தரையை துடைக்கும் குச்சியில் குளுக்கோஸ் பாட்டிலை பொருத்தி நோயாளிக்கு ஏற்றப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. டெங்கு நோய் பரவலை தடுப்பதற்காக கொசு வலையினை பொருத்தும் வகையில் கம்பி அமைக்கப்பட்டிருந்தது. அதில் தான் குளுக்கோஸ் பாட்டில் பொருத்தப்பட்டு நோயாளிக்கு ஏற்றப்பட்டுள்ளது.
இதேபோல ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் கீழ்த்தரமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். இக்காரியத்தை செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க தீவிரமாக தேடி வருகிறோம். அரசு மருத்துவமனைகள் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.