பயங்கரவாத பின்னணியில் இருப்போர்மீது நடவடிக்கை தேவை; போர் தேவையில்லை: திருமாவளவன் யோசனை
பயங்கரவாத பின்னணியில் இருப்போர்மீது நடவடிக்கை தேவை; போர் தேவையில்லை: திருமாவளவன் யோசனை
ADDED : மே 02, 2025 06:05 AM

அவனியாபுரம் : மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடக்கும் என அறிவிக்கவில்லை. அடுத்த கணக்கெடுப்பு 2031ல் வரும் என தெரிகிறது.
அப்போது பா.ஜ., ஆட்சியில் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. இப்போது இந்த அறிவிப்பை செய்திருப்பது கண்துடைப்புதான். இந்தியா கூட்டணியிலுள்ள எதிர்கட்சிகள் ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் தேர்தல் ஆதாயம் கருதி இந்த நிலைப்பாட்டை பா.ஜ., அறிவித்து இருக்கிறது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத படுகொலை மிகுந்த துயரத்தை அளிக்கிறது. பிரதமர் மோடி தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து தாயகம் திரும்பினார். டில்லியில் அமைச்சரோடு ஆலோசித்தவர், பீஹாருக்கு சென்றது அதிர்ச்சி அளிக்கிறது. பாகிஸ்தானோடு போர் நடத்துவோம் என்பதுபோல பா.ஜ., அரசு அறிவிப்பு வெளியிடுகிறது.
சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக சொல்கின்றனர். பாகிஸ்தான் அமைச்சர் இந்தியாமீது போர் தொடுப்போம் என்கிறார். பயங்கரவாதத்தின் பின்னணியில் யார் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு ஒரு போர் தேவையா என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
மதுரை சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை ஊடகங்கள் பணம் செலுத்தி ஒளிபரப்பு பெற வேண்டும் என்ற அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. முதல்வர் தலையிட்டு ஊடகங்களின் ஜனநாயக உரிமையை பறிக்காமல் அனுமதிக்க வேண்டும். கலெக்டர் ஊடகவியலாளர்களை அவமதிக்கும் வகையில் நடத்தக் கூடாது என்றார்.

