பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக பேசியதால் நடவடிக்கை: ஐக்கிய ஜமாத் பொதுச்செயலர் பதவி பறிப்பு
பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக பேசியதால் நடவடிக்கை: ஐக்கிய ஜமாத் பொதுச்செயலர் பதவி பறிப்பு
ADDED : மே 03, 2025 01:04 AM

கோவை: 'பா.ஜ.,- அ.தி.மு.க., கூட்டணி பலம் வாய்ந்தது. அந்த கூட்டணியை நாம் ஆதரிக்க வேண்டும்' என, அ.தி.மு.க., சிறுபான்மை பிரிவு மாநில இணை செயலர் அப்துல் ஜப்பார், பொதுக்கூட்ட மேடையில் பேசியதால், சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் பொதுச்செயலர் பொறுப்பில் இருந்து, அவர் நேற்று நீக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஆசனுார் அருகே உள்ள அரேபாளையத்தில், அ.தி.மு.க., சார்பில் மே தின பொதுக்கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது.
அதில், அ.தி.மு.க., சிறுபான்மை பிரிவு மாநில இணை செயலர் அப்துல் ஜப்பார் பேசியதாவது:
பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்தால், அ.தி.மு.க.,வுக்கு பலம் வரும். ஆள் பலம், அதிகார பலம் கிடைக்கும். இன்றைய தினம் அதிகார பலமே பேசுகிறது. அதனால், பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி சேர வேண்டுமென கூறி வந்தேன்.
இப்போது கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணி வலுவான சக்தியாக உருவெடுக்கும்; அந்த சக்திக்கு, நாம் துணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இவரது பேச்சு, கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதைத் தொடர்ந்து, ஜமாத் ஆட்சி மன்ற குழுவின், அவசர கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் பஷீர் அகமது தலைமை வகித்தார்.
அதில், 'அப்துல் ஜப்பார் பேச்சுக்கும், ஐக்கிய ஜமாத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அவரது பேச்சுக்கு ஜமாத்துகளும், ஜமாத் உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்ததால், கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் பொதுச்செயலர் பொறுப்பில் இருந்து, அப்துல் ஜப்பார் நீக்கப்படுவதாக அறிவித்திருக்கிறது.
இது தொடர்பாக, அப்துல் ஜப்பாரிடம் விளக்கம் கேட்டபோது, “எதார்த்தத்தை பேசினேன்; அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் என்ன செய்ய முடியும்,” என்றார்.

