ரூ.3.74 கோடி கடன் பாக்கி: நடிகர் சிவாஜி இல்லத்தை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு
ரூ.3.74 கோடி கடன் பாக்கி: நடிகர் சிவாஜி இல்லத்தை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு
ADDED : மார் 03, 2025 12:13 PM

சென்னை: நடிகர் சிவாஜி கணேசன் இல்லத்தை ஜப்தி செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த். (மூத்த மகன் ராம்குமாரின் மகன்). இவரும், மனைவி அபிராமியும் ஈஷன் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரிலான சினிமா கம்பெனியின் பங்குதாரர் ஆக உள்ளனர். இந்த நிறுவனம் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிப்பில் 'ஜெகஜால கில்லாடி' என்ற பெயரில் படம் ஒன்றை தயாரித்தது.
படத்தின் தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.3.74 கோடி கடன் பெற்றிருந்தனர். ஆண்டுக்கு 30 சதவீதம் வட்டியுடன் கடனை திருப்பி தருவதாக அவர்கள் உறுதி அளித்திருந்தனர்.
ஆனால் இந்த விவகாரத்தில் வாக்குறுதி படி அசலையும், வட்டியையும் துஷ்யந்த் தரப்பில் திருப்பித் தரவில்லை. இதையடுத்து, இவ்விவகாரத்தில் தீர்வு காணும் பொருட்டு சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி ரவிந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.
அவரின் விசாரணையைத் தொடர்ந்து கடன் தொகை, வட்டி என மொத்தம் 9 கோடியே 2 லட்சத்து 40,000 ரூபாயை வசூலிக்க ஏதுவாக ஜெகஜால கில்லாடி என்ற படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் ஒப்படைக்கும்படி 2024ம் ஆண்டு மே 4 ம் தேதி நீதிபதி ரவிந்திரன் உத்தரவிட்டு இருந்தார்.
உரிமத்தை விற்று கடன் தொகையை ஈடு செய்து, மீதி தொகையை தயாரிப்பு நிறுவனமான ஈஷன் நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளுமாறும் அவர் தனது உத்தரவில் கூறி இருந்தார். இந்த உத்தரவின் படி, பட உரிமையை கோரும் போது, படம் முடியவில்லை என்று துஷ்யந்த் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இதையடுத்து, மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்து பொது ஏலம் விட உத்தரவிடுமாறு தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்ய ஈஷன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்ட நீதிபதி, சம்பந்தப்பட்ட சார் பதிவாளருக்கும் தகவல் தெரிவிக்குமாறு ஆணையிட்டு வழக்கு விசாரணையை நாளை மறுநாள் (மார்ச். 5) ஒத்தி வைத்துள்ளார்.