த.வெ.க., மாநாட்டுக்கு எப்படி வரணும்; தொண்டர்களுக்கு விஜய் விதித்த 8 நிபந்தனை
த.வெ.க., மாநாட்டுக்கு எப்படி வரணும்; தொண்டர்களுக்கு விஜய் விதித்த 8 நிபந்தனை
UPDATED : செப் 24, 2024 02:39 PM
ADDED : செப் 23, 2024 09:24 PM

சென்னை: த.வெ.க., மாநாட்டுக்கு வருபவர்கள் யாரும் மது அருந்தி விட்டு வரக்கூடாது என்று கட்சி மேலிடம் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசியலில் இறங்கி இருக்கும் பிரபல நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்று தமது கட்சிக்கு பெயர் வைத்துள்ளார். அண்மையில் கட்சிக் கொடி, பாடல் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். இன்று (செப்.23) கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதாகவும் கூறி இருந்தார். ஆனால் தேதி மாற்றப்பட்டு விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ம் தேதி மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்காக காவல்துறையில் இருந்து அனுமதியும் பெறப்பட்டு விட்டது.
இந்நிலையில் மாநாட்டுக்கு வருபவர்கள் எப்படி வரவேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? கட்சி தலைமை சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமாக 8 நிபந்தனைகளை கட்சி மேலிடம் ரசிகர்கள் கம் தொண்டர்களுக்கு பிறப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த உத்தரவுகள்:
* பெண் போலீசாரிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.
*யாரும் மது அருந்திவிட்டு வரக்கூடாது.
* சாலையில் எந்த வாகனங்களுக்கும் இடையூறு செய்யக்கூடாது.
*அதிகாரிகளிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.
* கிணறு, ஆபத்தான பகுதிகள் இருப்பின் கவனமாக இருக்க வேண்டும்.
*இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சாகசங்களில்(பைக் ஸ்டண்ட்) ஈடுபடவே கூடாது.
* மருத்துவக்குழு, தீயணைப்புத்துறையினருக்கு உரிய ஏற்பாடுகள் செய்து தரவேண்டும்.
*பேருந்து, வேன்களில் அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே ஆட்களை ஏற்றி வரவேண்டும்.
இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதற்கு சில பின்னணி காரணங்கள் உண்டு என்றும் சொல்லப்படுகிறது. இந்த உத்தரவுகளில் மிக முக்கியமாக பைக் ஸ்டண்ட்களில் ஈடுபடக்கூடாது என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கட்சியின் நிர்வாகிகளே சுட்டிக்காட்டுகின்றனர்.
விழுப்புரத்தை சேர்ந்த ரசிகர் ராஜசேகர் என்பவர் த.வெ.க., கொடியை பைக்கில் கட்டிக் கொண்டு அதிவேகமாக சாகசம் செய்து இருக்கிறார். சமூக வலைதளங்களில் இந்த சாகசத்தை வீடியோவாக எடுத்து அவரது நண்பர்கள் வெளியிட்டு உள்ளனர். அதை தொடர்ந்து போலீசார் ராஜசேகரை கைது செய்திருக்கின்றனர். இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டும் கட்சி நிர்வாகிகள், பைக் ஸ்டண்ட்டை மேலிடம் விரும்பவே இல்லை, அதனால் தான் இந்த கண்டிஷன் போடப்பட்டு உள்ளதாகவும் கூறுகின்றனர்.