3 வருஷமா எதுவும் நடக்கல... அதானி விவகாரம்; செந்தில் பாலாஜி மறுப்பு
3 வருஷமா எதுவும் நடக்கல... அதானி விவகாரம்; செந்தில் பாலாஜி மறுப்பு
ADDED : நவ 21, 2024 02:25 PM

சென்னை: அதானி முறைகேடு விவகாரத்தில் தி.மு.க., அரசுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.
சூரிய ஓளி மின்சார ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, இந்திய அதிகாரிகளுக்கு தொழிலதிபர் அதானி 25 கோடி டாலர்கள் லஞ்சமாக கொடுத்து இருப்பதாகவும், அதனை மறைத்து அமெரிக்க முதலீடுகளைப் பெற்று மிகப்பெரிய மோசடியை செய்திருப்பதாக நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆனால், அதானியை கைது செய்ய வேண்டும் என்றும், பார்லிமென்ட் கூட்டு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ஆனால், மின் ஒப்பந்த விவகாரத்தில் தமிழகத்தை ஆளும் தி.மு.க., அரசுக்கும், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா (ஜெகன்மோகன் அரசு) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் தொடர்பிருப்பதாக பா.ஜ., குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில், பா.ஜ.,வின் இந்தக் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.
'கடந்த 3 ஆண்டுகளில் அதானி குழுமத்துடன் தமிழக அரசு எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. மின்வாரியம் எந்தவித ஒப்பந்தத்தையும் போடவில்லை. தவறான கருத்துக்களை சிலர் பதிவிட்டு வருகின்றனர்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.