சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்களுக்கு கூடுதல் அதிகாரம் அளித்து உத்தரவு
சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்களுக்கு கூடுதல் அதிகாரம் அளித்து உத்தரவு
ADDED : செப் 03, 2026 01:04 AM
சென்னை: பொது மக்களுக்கு அத்தியாவசிய சான்றிதழ்கள் வழங்குவதில், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்களுக்கு, கூடுதல் அதிகாரம் வழங்கி, வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஜாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ் உட்பட, 26 வகை சான்றிதழ்கள் பெற, பொது மக்கள் 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பிக்கின்றனர்.
இதில் மக்களுக்கு விரைவாக சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, சான்றிதழ்கள் வழங்கும் நடைமுறையில், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வருவாய் துறை பிறப்பித்துள்ள அரசாணை:
ஆதிதிராவிடர் ஜாதி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஜாதி சான்றிதழ், அடகு கடை உரிமம் வழங்கும் அதிகாரம், தாசில்தாரிடம் இருந்து, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாருக்கு மாற்றப்படுகிறது
முதல் தலைமுறை பட்டதாரி, கணவனால் கைவிடப்பட்டோர், விவசாய வருவாய் சான்று, விதவை சான்றிதழ், வேலை இல்லாதவர் சான்றிதழ், இடம் பெயர்ந்த குடும்ப சான்றிதழ் உட்பட, 12 வகை சான்றிதழ்கள் வழங்கும் அதிகாரம், தாசில்தாரிடம் இருத்து, துணை தாசில்தாருக்கு மாற்றப்படுகிறது
கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை தாசிதார் அல்லது சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், வழக்கமான தாசில்தார் என்ற நான்கு நிலை பரிசீலனையில், இனி வழக்கமான தாசில்தார்கள் ஈடுபட வேண்டியதில்லை
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் காரணமாக, மக்கள் கோரும் சான்றிதழ்கள் விஷயத்தில், விரைவாக முடிவு எடுக்க முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.
