தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வி.சி.க.,வில் இருந்து வெளியேறினார் ஆதவ் அர்ஜூனா

வி.சி.க.,வில் இருந்து வெளியேறினார் ஆதவ் அர்ஜூனா

வி.சி.க.,வில் இருந்து வெளியேறினார் ஆதவ் அர்ஜூனா


ADDED : டிச 15, 2024 06:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2024 06:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜூனா, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜூனா பேசிய பேச்சுகளால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவரின் பேச்சு விடுதலை சிறுத்தைகள், தி.மு.க., இடையே பெரும் உரசலை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் முன்னணி நிர்வாகிகள் இடையேயும் கருத்து முரண்கள் எழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து ஆதவ் அர்ஜூனாவை ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதன் பிறகு, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது தொடர்பாகவும், புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்காதது குறித்தும் ஆதவ் அர்ஜூனா 'டிவி'க்களுக்கு பேட்டி அளித்து வந்தார்.

இது தொடர்பாக திருமாவளவன் திருச்சியில் அளித்த பேட்டியில், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளை தெரிவிக்கிறார். அவருக்கு ஏதோ ஒரு மறைமுக செயல் திட்டம் இருப்பதாக தெரிகிறது. ஆதவ் அர்ஜூனா சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்வதே தவறு. அப்படி சொல்லக்கூடாது.அவர் மீண்டும் கட்சியில் இயங்க வேண்டுமென நினைத்து இருந்தால் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்திருப்பார் எனக்கூறியிருந்தார்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறுவதாக ஆதவ் அர்ஜூனா அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர், திருமாவளவனுக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டு உள்ளார்.

அக்கடிதத்தில் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளதாவது: விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. குறிப்பாக, கட்சியின் வளர்ச்சி என்ற ஒற்றைக் காரணியைத் தாண்டி எனக்கு வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை என்பதை தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். எனக்குள் எழுந்த சில நியாயமான கோபங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுகிறது. அது ஒருகட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை நான் விரும்பவில்லை.

ஏற்கனவே, கட்சியிலிருந்து என்னை ஆறு மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுபோன்ற வீணான விவாதங்களுக்கு வழிவகுக்க கூடாது என்று எண்ணுகிறேன். எனவே, என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக்கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன். கட்சியிலிருந்து வெளியேறும் இந்த கனமான முடிவை கனத்த இதயத்துடன் காலத்தின் சூழ்நிலைக் கருதியே எடுத்துள்ளேன். இவ்வாறு அந்த கடிதத்தில் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us