"ஆட்சிக்கு வருவதற்காக சொன்னது அத்தனையும் பொய்" ... இளைஞர்களை வஞ்சிப்பதா? தி.மு.க., அரசை விளாசிய இ.பி.எஸ்
"ஆட்சிக்கு வருவதற்காக சொன்னது அத்தனையும் பொய்" ... இளைஞர்களை வஞ்சிப்பதா? தி.மு.க., அரசை விளாசிய இ.பி.எஸ்
ADDED : செப் 19, 2024 10:23 AM

சென்னை: குரூப் 4 தொகுப்பில் உள்ள 20,000 காலிப்பணியிடங்களை நிரப்பாமல், லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிக்கும் தி.மு.க., அரசுக்கு இ.பி.எஸ்., கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:- 'ஆட்சிக்கு வருவதற்காக சொன்னது அத்தனையும் பொய்' என்ற ரீதியில், கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்ட விடியா தி.மு.க., அரசு, அனைத்து தரப்பு மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
'தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர்' என்றும் தேர்தல் வாக்குறுதியை அள்ளி வீசிவிட்டு, தற்போது டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தொகுப்பில் 20,000 இடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில், நடப்பாண்டில் அதில் வெறும் கால் பங்கான 6,244 இடங்களை மட்டுமே நிரப்புவதன் மூலம், இத்தேர்வைக் கனவாகக் கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிக்கும் தி.மு.க., அரசுக்கு எனது கடும் கண்டனம்.
போட்டித் தேர்வு மாணவர்களின் ஒருமித்த கோரிக்கையினைக் கருத்திற்கொண்டு, நடப்பாண்டு குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்குமாறு தி.மு.க., முதல்வரை வலியுறுத்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

