பெண்கள் பாதுகாப்பை துறந்து விளம்பர மோகத்தில் தி.மு.க., அரசு; இ.பி.எஸ். குற்றச்சாட்டு
பெண்கள் பாதுகாப்பை துறந்து விளம்பர மோகத்தில் தி.மு.க., அரசு; இ.பி.எஸ். குற்றச்சாட்டு
ADDED : பிப் 18, 2025 02:59 PM

சென்னை; பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக துறந்துவிட்டு, விளம்பர மோகத்தில் தி.மு.க., அரசு இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., குற்றம்சாட்டி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
கோவை அருகே 17 வயது சிறுமி 7 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சிறுமிகளுக்கே பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு ஸ்டாலின் மாடல் தி.மு.க., ஆட்சியில் மாறி வருவது மிகுந்த வேதனைக்குரியது.
குற்றம் நடந்த பின் கைது செய்துவிட்டோம் என்று சொல்லும் முதல்வர், குற்றத்தை தடுக்க என்ன செய்தார் என்பதை ஏன் சொல்ல மறுக்கிறார்?
தனக்கு தானே 'அப்பா' என்று புகழாரம் சூட்டிக் கொள்பவருக்கு, இந்த மாணவி மகள் போன்றவர் இல்லையா? இவரின் பாதுகாப்பு பறிபோனதற்கு யார் பொறுப்பு?
பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக துறந்துவிட்டு, விளம்பர மோகத்தில் இருக்கும் தி.மு.க., அரசுக்கு எனது கடும் கண்டனம். கோவை மாணவி பாலியல் வழக்கில் கைதானோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

