எறும்பு கடித்து கல்லூரி மாணவன் உயிரிழப்பா; நம்பமுடியவில்லை என்கிறார் இ.பி.எஸ்.
எறும்பு கடித்து கல்லூரி மாணவன் உயிரிழப்பா; நம்பமுடியவில்லை என்கிறார் இ.பி.எஸ்.
ADDED : பிப் 17, 2025 06:24 PM

சென்னை; எறும்பு கடித்து கல்லூரி மாணவன் உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது, நம்ப முடியாமல் இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ். கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
திருநெல்வேலியில் கல்லூரி பயிலும் விக்னேஷ் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இது குறித்து அவரது தாயார் காவல்துறையில் முறையிட்டு கழிவறையில் இருந்த அதிக அளவு ரத்தம் குறித்து கேட்க, 'எறும்பு கடித்ததால் வந்திருக்கலாம்' என்று பொறுப்பற்ற முறையில் தி.மு.க., அரசின் காவல்துறை தெரிவித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தி.மு.க., ஆட்சியில் காவல்துறை விசாரணை என்பதே விந்தையானதாக மாறி விட்டது.இ.சி.ஆர்., வழக்கில் டோல் கேட்டில் விலக்கு பெற தி.மு.க., கொடி கட்டிய குற்றவாளி; இப்போது, எறும்பு கடித்து இவ்வளவு ரத்தம் சிந்தி, மர்மமாக உயிரிழந்த மாணவன் என இவர்கள் விசாரணை எல்லாம் சினிமாவில் வைத்தால் கூட யாரும் நம்ப முடியாத அளவில் தான் இருக்கிறது.
பட்டியலினத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரியான மாணவன் விக்னேஷின் மரணத்தின் உண்மையான காரணத்தை மறைத்து திசைதிருப்ப தி.மு.க., அரசு முயற்சிக்குமாயின், அது கடும் கண்டனத்திற்குரியது.
மாணவன் விக்னேஷின் மரணத்திற்கான காரணத்தை முறையாக விசாரணை செய்து கண்டறிந்து, அதில் யாருக்கேனும் தொடர்பு இருப்பின், கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.