ADDED : மார் 19, 2024 02:47 AM

சென்னை : லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும், கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் அ.தி.மு.க., தவித்து வருகிறது. தற்போதைய நிலையில், புதிய தமிழகம், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, எஸ்.டி.பி.ஐ., புரட்சி பாரதம் போன்ற சிறிய கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள், அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.
முன்னேற்றமில்லை
பா.ம.க., உடன் நடந்த பேச்சு தோல்வியில் முடிந்துள்ளது. அக்கட்சி பா.ஜ., கூட்டணியில் இணைந்துள்ளது. தே.மு.தி.க., உடன் இரண்டு கட்ட பேச்சு நடந்தது. அதன்பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை.
அ.தி.மு.க., சார்பில், நான்கு தொகுதிகள் ஒதுக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தே.மு.தி.க., தரப்பில் கூடுதலாக ஒரு ராஜ்யசபா சீட் வழங்கும்படி வலியுறுத்துவதால், இழுபறி நீடிக்கிறது.
இந்நிலையில், நாளை மனு தாக்கல் துவங்க உள்ளதால், தொகுதி பங்கீட்டை முடித்து வேட்பாளர்களை அறிவிக்க, அ.தி.மு.க., முடிவு செய்து உள்ளது.
எனவே, கூட்டணி குறித்த முடிவை, இன்று மாலைக்குள் தெரிவிக்கும்படி, தே.மு.தி.க., தலைமையிடம், அ.தி.மு.க., சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ., முயற்சி
இந்நிலையில், பா.ம.க., உடனான கூட்டணியை உறுதி செய்த பா.ஜ., தலைமை, தே.மு.தி.க.,வை வளைக்கும் இறுதிகட்ட முயற்சியை கையில் எடுத்துள்ளது.
மத்திய இணை அமைச்சர் முருகன் வாயிலாக, விஜயகாந்த் மூத்த மகன் விஜயபிரபாகரனிடம் இப்பேச்சு நடப்பதாக தெரிகிறது.
தே.மு.தி.க.,வின் கூட்டணி முடிவை, அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா இன்று அல்லது நாளை முறைப்படி அறிவிக்க வுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

