எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி பேசினால் யாராக இருந்தாலும் சும்மாவிட மாட்டேன்; திருமாவை எச்சரித்த ஜெயக்குமார்
எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி பேசினால் யாராக இருந்தாலும் சும்மாவிட மாட்டேன்; திருமாவை எச்சரித்த ஜெயக்குமார்
ADDED : ஆக 11, 2025 04:24 PM

சென்னை: எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி பேசினால் அது யாராக இருந்தாலும் சும்மாவிட மாட்டேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
சென்னையில் அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது;
திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார். அதோடு இந்த விஷயத்தை நான் பெரிதாக்க விரும்பவில்லை. ஆனால் அன்பு நண்பர் திருமாவளவனுக்கு நான் ஒன்று சொல்கிறேன். எனக்கு அவர் மிகவும் நெருக்கம்.
ஆனால், எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி பேசினால் விடமாட்டேன். அது யாராக இருந்தாலும் சரி, அதிமுக தொண்டன் அதை விடமாட்டான். தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள்.
திமுகவுக்கு தலைவர் கருணாநிதி. ஆனால் இன்றைக்கு திருமாவளவனுக்கு கருணாநிதி தலைவராகி விட்டார். கருணாநிதி,ஸ்டாலின் துதி பாடுங்க. எங்களுக்கு மாறுபட்ட கருத்தே கிடையாது.
நீங்கள் ஒரு 5 சீட்டுக்கு எதிர்பார்க்கலாம். அதற்காக கருணாநிதியை உயர்த்தி பேசிவிட்டு, எம்ஜிஆரை,ஜெயலலிதாவை அவமரியாதை செய்வது எந்த விதத்திலும் நியாயமில்லை. இனி மேல் பேசாதீர்கள்.
அரசு பணிகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் பதவி உயர்வு பெற்று வரமுடியாத சூழல் இருந்தது. ஆனால் அவர்களும் பதவி உயர்வு பெறலாம் என்று ஒரு கையெழுத்து போட்டு அவர்களை அந்த நிலைக்கு கொண்டு வந்தவர் எம்ஜிஆர். இதை திருமாவளவன் மறந்துவிடலாமா?
31 சதவீதம் என்று இருந்த இட ஒதுக்கீட்டை 50 ஆக ஆக்கியவர் எம்ஜிஆர். ஆனால் கருணாநிதி 50ஐ 30, 20 என மாற்றினார். ஆனால் 31 சதவீதம் என்பதை எம்ஜிஆர் 50 ஆக மாற்றி, சமூக நீதியை நிலைநாட்டியவர்.
ஆனால் எம்ஜிஆரை கொச்சைப்படுத்தி, அவரை ஒரு குறுகிய வட்டத்தில் அடைத்தால் திருமாவளவனை வரலாறு மன்னிக்காது. இனிமேல் எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி எக்காரணம் கொண்டும் பேசாதீர்கள். அதுதான் நாங்கள் விடுக்கும் வேண்டுகோள்.
இவ்வாறு அவர் கூறினார்.