வறுமை கோடு எண் கேட்டு அலையும் முதியோர் : உதவித்தொகை பெறுவதில் சிக்கல்
வறுமை கோடு எண் கேட்டு அலையும் முதியோர் : உதவித்தொகை பெறுவதில் சிக்கல்
ADDED : ஜூலை 24, 2011 02:33 AM
முதியோர் உதவித் தொகைக்காக விண்ணப்பிக்கும் போது, வறுமை கோட்டுக்கு கீழுள்ளோர் பட்டியல் எண் கேட்டு, அதிகாரிகள் அலைக்கழிப்பதால், அவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, ஜூன் முதல் தேதியில் இருந்து, முதியோர், கணவனால் கைவிடப்பட்டோர், கணவனை இழந்தோர், முதிர் கன்னி என அனைவருக்கும், உதவித்தொகை, 1,000 ரூபாயாக உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆனால், 2001ல் எடுக்கப்பட்ட வறுமை கோட்டுக்கு கீழுள்ளோர் பட்டியல் எண் கண்டிப்பாக வேண்டும் என, அதிகாரிகள் கேட்கின்றனர். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்திடம் கேட்டால், 'பட்டியலில் உங்கள் பெயர் இல்லை' என கூறுகின்றனர். சொந்த வீடு இல்லாததால்,வேலை காரணமாக, பல ஊர்களுக்கு இடம் மாறி செல்லும் முதியோர், என்ன செய்வது என்று தெரியாமல் கவலையில் வாடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில், பிள்ளைகளால் கைவிடப்படும் முதியோர், நகரப் பகுதியில் வீட்டு வாடகை அதிகம் என்பதால், கிராமப் புறங்களை நாடி செல்கின்றனர். அவர்கள் அங்கு வசித்து வருவது, குறைந்த காலம் என்பதால், அவர்கள் பெயர், வறுமை கோட்டுக்கு கீழுள்ளோர் பட்டியலில் இருப்பதில்லை. ஊராட்சி தலைவரும், வி.ஏ.ஓ.,வும் கைவிரித்து விடுகின்றனர்.
ஈரோடு மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் கூறியதாவது: அரசு உத்தரவின்படி, உதவித்தொகை பெற, 65 வயதும்,வேலை செய்ய இயலாதவராகவும் இருக்க வேண்டும்; 5,000 ரூபாய் மதிப்புக்கு மேல் எந்த சொத்தும், மகன், மகள் ஆதரவும் இருக்கக் கூடாது. வறுமை கோட்டுக்கு கீழுள்ளோர் எண், கண்டிப்பாக வேண்டும் என்பது அரசு உத்தரவு. அவர்கள் பெயர் பட்டியலில் இல்லாவிட்டாலும் கூட, உண்மையில் ஆதரவற்ற நிலையில் உள்ளனரா என்பதை கண்டறிந்து, நாங்களே வறுமை கோட்டுக்கு கீழுள்ளோர் எண் பெற்று, உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கிறோம். உண்மையில் ஆதரவற்று கஷ்டப்படும் முதியோர், தகுந்த சான்றுகளுடன் விண்ணப்பித்தால், உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -

