UPDATED : பிப் 20, 2024 03:36 AM
ADDED : பிப் 20, 2024 01:27 AM

சென்னை:தி.மு.க., அரசின் மூன்றாவது வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. விவசாயிகளை கவரும் வகையில், பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, தி.மு.க., ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது.
இதில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிக பிரிவுக்கான திட்டங்கள் மட்டுமின்றி, கூட்டுறவு, பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, மின்சாரம் உள்ளிட்ட விவசாயிகள் தொடர்புடைய துறைகளுக்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2024 - 25ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை, மூன்றாவது முறையாக அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்யவுள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்குவதால், விவசாயிகளை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் தொடர்பாக விவசாயிகளிடம் சமீபத்தில் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, மூத்த விவசாயிகளுக்கு உதவித்தொகை வேண்டும் என்று வலியுறுத்தினர். முதல்வரும் ஆலோசனை நடத்தியுள்ளார்.
எனவே, இதுதொடர்பாக அறிவிப்பு வெளியாகுமா என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
மண்வள மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பது, வேளாண் விளைபொருட்கள் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான திட்டங்களும் அறிவிக்கப்படலாம்.
முந்தைய பட்ஜெட்டில், வேளாண் துறைக்கு, 38,904 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம்.

