'உழவரை தேடி வேளாண்மை' திட்டம் முடக்கம்?' உங்களுடன் ஸ்டாலின்' முகாமிற்கு அதிகாரிகள் செல்வதால் அதிருப்தி
'உழவரை தேடி வேளாண்மை' திட்டம் முடக்கம்?' உங்களுடன் ஸ்டாலின்' முகாமிற்கு அதிகாரிகள் செல்வதால் அதிருப்தி
ADDED : ஜூலை 30, 2025 06:37 AM

சென்னை: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் துவக்கப்பட்டு உள்ளதால், 'உழவரை தேடி வேளாண்மை' திட்டம் துவங்கிய வேகத்திலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், 1.47 கோடி ஏக்கரில் பலவகை பயிர் சாகுபடி நடந்து வருகிறது. மாநிலம் முழுதும், 79.3 லட்சம் விவசாயிகள் சொந்தமாக நிலம் வைத்து, சாகுபடி செய்து வருகின்றனர். இதில், 93 சதவீதம் பேர் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகள்.
தனி பட்ஜெட்
மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சாகுபடி உதவிகள், வேளாண் கருவிகளை பெற்று, இவர்கள் ஆர்வமுடன் சாகுபடி செய்கின்றனர். தி.மு.க., அரசு, 2021ம் ஆண்டு பொறுப்பேற்றபின், வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இதன் வாயிலாக, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மானிய உதவிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. இது குறித்த விபரம் தெரியாததால், இத்திட்டங்களில் பலன் அடைந்தவர்களே, மீண்டும் மீண்டும் பலன் அடைந்து வருகின்றனர். இதனால், சாகுபடி பரப்பை திட்டமிட்டபடி அதிகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திட்டங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் சென்று சேரும் வகையில், உழவரை தேடி வேளாண்மை என்ற திட்டத்தை, வேளாண் துறை நடப்பாண்டு முதல் துவங்கியுள்ளது. இந்த திட்டத்தை, மே 29ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
அதன்படி, வேளாண் துறையை சேர்ந்த பல்வேறு பிரிவினரும், மாதம் இரண்டு முறை வருவாய் கிராமம் வாரியாக சென்று, முகாம் அமைத்து, விவசாயிகளை சந்திக்க வேண்டும். விவசாயம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கி, பயிர் சார்ந்த நவீன தொழிற்நுட்பங்கள் குறித்து விளக்க வேண்டும்.
கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு தொழிலில் உள்ள பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். சாகுபடி தொடர்பான மானிய உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலம் முழுதும் உள்ள, 17,116 வருவாய் கிராமங்களில், இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதான காரணம்
இந்நிலையில், இந்த திட்டத்தை போன்றே, 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டத்தை, அரசு துவக்கியுள்ளது. இதனால், உழவரை தேடி வேளாண்மை திட்டம் துவங்கிய வேகத்திலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமிற்கு, வேளாண்மை அதிகாரிகள், அலுவலர்கள் சென்று விடுவதே, இதற்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது. இதனால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.