செலிபிரட்டிகளை கேவலப்படுத்தும் 'ஏஐ': எல்லை மீறும் இளசுகள்
செலிபிரட்டிகளை கேவலப்படுத்தும் 'ஏஐ': எல்லை மீறும் இளசுகள்
UPDATED : செப் 23, 2024 12:25 PM
ADDED : செப் 23, 2024 12:24 PM

சென்னை: 'ஏஐ' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகைககள் உள்ளிட்ட செலிபிரட்டிகளை கேவலப்படுத்தும் நோக்கில் எடிட் செய்து இணையத்தில் பரப்பும் வீடியோக்கள் அதிகரித்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பாக ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகைகளின் டீப்பேக் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது திரிஷாவின் வீடியோவும் வைரலாகி உள்ளது.
இன்றைய உலகம் தொழில்நுட்பத்தையே அதிகம் சார்ந்திருப்பது அனைவரும் அறிந்ததே. தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதை விட, அதனால் ஏற்பட்டுவரும் பாதிப்புகளையும் எச்சரிக்கையாக கவனிக்க வேண்டும். குறிப்பாக உலகை தற்போது ஆட்டிப்படைக்கும் 'ஏஐ' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகம் செய்ததில் இருந்து, எல்லா துறைகளிலும் பெரிதும் உதவிப்புரிகிறது. ஆனால், இந்த 'ஏஐ' தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் புற்றீசல் போல அதிகரித்து வருகின்றனர்.
ஏஐ.,யை பயன்படுத்தி சிலரை அசிங்கப்படுத்துகின்றனர். அதிலும் செலிபிரட்டிகளை ஏஐ மூலம் நெட்டிசன்கள் அவர்களின் இஷ்டத்திற்கு எடிட் செய்து பரப்புவது அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பாக 'டீப் பேக்' மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து பரப்பினர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி கூட, தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்துங்கள் என வலியுறுத்தினார். பின்னர் எடிட் செய்தவர்களை போலீசார் கைது செய்ததால், இந்த விவகாரம் கொஞ்சம் குறைந்தது.
டிரம்ப் - கமலா ஹாரிஸ்
சில நாட்களுக்கு முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிரெதிரே களமிறங்கிய டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் ஆகியோர் ஒன்றாக பீச்சில் நடந்து வருவது போலவும், முத்தமிடுவது போலவும் ஏஐ வீடியோ வைரலாக பரவின. இப்படி ஏஐ தொழில்நுட்பத்தை சட்டவிரோதமாக தவறான வழியில் பயன்படுத்தி வருவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
![]() |
திரிஷா
அந்த வகையில், தற்போது 'தி கோட்' படத்தில் விஜயுடன் திரிஷா நடனமாடினார். அதே கெட்டப்பில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரிஷாவும் ஒரு இளைஞரும் கட்டிப்பிடிப்பது போலவும், லிப்லாக் முத்தம் கொடுப்பது போன்றும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதனை பலரும் கண்டித்து பதிவிட்டு வருகின்றனர். அனுமதி இல்லாமல் ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி இப்படி செய்வது குற்றம் எனவும், இதுபோன்று சித்தரித்து கேவலப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் இனிவரும் நாட்களில் இதனை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர்.