அ.தி.மு.க., - த.வெ.க., மோதல்: பின்னணியில் குளிர்காயும் தி.மு.க.,
அ.தி.மு.க., - த.வெ.க., மோதல்: பின்னணியில் குளிர்காயும் தி.மு.க.,
UPDATED : பிப் 05, 2026 12:32 AM
ADDED : பிப் 05, 2026 12:22 AM

தமிழக அரசியல் களத்தில், அ.தி.மு.க., - த.வெ.க., இடையே பிரச்னையை அதிகப்படுத்த, தி.மு.க., மேலிடம் முயற்சி செய்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
'சட்டசபை தேர்தலில், எங்களுக்கும் தி.மு.க.,வுக்கும் இடையேதான் போட்டி' என, அ.தி.மு.க.,வினர் பிரசாரம் செய்கின்றனர். இருப்பினும், 'த.வெ.க-.,வுக்கும் தி.மு.க.,வுக்கும் இடையேதான் போட்டி' என, அரசியல் களத்தை மாற்ற, த.வெ.க., தலைவர் விஜய் முயற்சி செய்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக, அ.தி.மு.க.,வும் த.வெ.க.,வும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றன. இதற்கு பிள்ளையார் சுழி போட்டது விஜய் தான். த.வெ.க., துவங்கப்பட்ட நாளில் இருந்து, அக்கட்சியை அ.தி.மு.க., விமர்சனமே செய்யவில்லை. விஜயும் விமர்சிக்காமல் தான் இருந்தார்.
இருவரும் சேர்ந்து, தி.மு.க.,வை விமர்சிக்க துவங்கியதால், அரசியல் அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் தி.மு.க., தடுமாறியது. இந்நிலையில், கடந்த மாதம் நடந்த த.வெ.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், 'அ.தி.மு.க.,வை ஊழல் சக்தி' என விமர்சித்தார் விஜய்.
பதிலுக்கு, அ.தி.மு.க.,வும், 'பனையூர் பண்ணையார்; வெளியே வந்து அரசியல் செய்யுங்க' என, விஜய்க்கு நேரடியாக பதிலடி கொடுக்க, இருதரப்புக்கும் இடையே முட்டல் -- மோதல் துவங்கியது.
ஆனால், தங்களை விமர்சித்த விஜய் குறித்து, தி.மு.க., தரப்பு எந்த பதிலும் சொல்லவில்லை. இதை அதன் போக்கிலேயே விட்டால், தங்களுக்கு நல்லது என நினைத்து, விஜய் குறித்து விமர்சிக்காமல் ஒதுங்கினர்.
அதேநேரம், அ.தி.மு.க.,வுக்கும் த.வெ.க-.,வுக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதலை, தி.மு.க., மறைமுகமாக முடுக்கிவிட்டது. மோதலை அதிகரிக்க, தனது ஆதரவு செய்தி நிறுவனங்களை களம் இறக்கியது.
இதையடுத்து, பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இருதரப்பு நிர்வாகிகளிடமும், அந்த சர்ச்சை குறித்தே கேள்விகளை கேட்க வைத்தது.
இதில் உணர்ச்சிவசப்படும் இருதரப்பு நிர்வாகிகளும், ஒருவரை ஒருவர் கடுமையான விமர்சிக்க, அதை, ஒதுங்கி நின்று ரசித்துக் கொண்டிருக்கிறது தி.மு.க., இப்படிப்பட்ட மறைமுக வேலையை தொடர்ச்சியாக செய்யவும் தி.மு.க., திட்டமிட்டுள்ளது.
- நமது நிருபர் -

