தி.மு.க., கூட்டணியில் தான் குழப்பம்: இ.பி.எஸ்., சொல்கிறார்
தி.மு.க., கூட்டணியில் தான் குழப்பம்: இ.பி.எஸ்., சொல்கிறார்
UPDATED : ஜூலை 08, 2025 10:53 PM
ADDED : ஜூலை 08, 2025 02:29 PM

கோவை: '' தி.மு.க., கூட்டணியில் தான் குழப்பம் உள்ளது. அக்கட்சி கூட்டணியை நம்பி களமிறங்குகிறது. ஆனால், அ.தி.மு.க., மக்களை நம்பி உள்ளது'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து அ.தி.மு.க., சார்பில் தேர்தல் பிரசாரம் நேற்று துவங்கியது. இந்நிலையில் இன்று (ஜூலை 08) கோவையில் நடந்த நிகழ்ச்சியில் இ.பி.எஸ்., பேசியதாவது: புதிதாக கட்சியில் இணைந்த அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்தியாவிலேயே ஜனநாயகம் மிக்க ஒரு கட்சி என்றால் அது அ.தி.மு.க., தான்.
ஜாதி, மதம்
அ.தி.மு.க.,வில் தான், இன்றைக்கு தலைமைக்கு விஸ்வாசமாக இருக்கிறார்கள். மக்களுக்கு சேவை செய்வதில் சிறப்பாக பணியாற்றுபவர்கள் உயர்ந்த இடத்திற்கு வரக் கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க., தான். நம்முடைய இயக்கத்தில் ஜாதி, மதத்திற்கு இடமே கிடையாது. அனைவரும் சகோதரத்துவத்துடன் பழகுகிறோம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, நமது இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும ஒரே இயக்கம் அ.தி.மு.க.,
இன்னல்கள், இடர்பாடுகள்
இன்றைக்கு நமது தலைவர்கள் எந்த வழியில் பின்பற்றினார்களோ, நாம் அனைவரும் அதே வழியில் பின்பற்றி, நடந்து கொண்டு இருக்கிறோம்.
எத்தனை சோதனைகள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருதலைவர்களும் நமது இயக்கத்தை கட்டி காத்த வரலாறு நாம் அனைவருக்கும் தெரியும். சாதாரணமாக இந்த இயக்கம் தொடங்கவில்லை.பல்வேறு இன்னல்கள், இடர்பாடுகள், துன்பங்கள், துயரங்களை நமது தலைவர்கள் சந்தித்து வரலாறு படைத்து, அந்த கட்சியை நம்மிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள்.
எந்த கொம்பனாலும்...!
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, நாம் அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் கடினமாக உழைக்க வேண்டும். எத்தனையோ ரூபத்தில் நமது இயக்கத்தை உடைக்க முயற்சி செய்தார்கள். அத்தனையும் இருபெரும் தலைவர்களின் சக்தியால் தகர்த்தெறியப்பட்டு உள்ளது. அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் அசைத்து கூட பார்க்க முடியாது என்ற நம்பிக்கையை நாம் பெற்று இருக்கிறோம்.
உயர்ந்த பதவி
ஒரு கட்சியை உருவாக்குவது அவ்வளவு எளிது அல்ல. இந்தியாவிலேயே நமது இயக்கத்திற்கு தனி மரியாதை உண்டு. பல்வேறு தேர்தல்களை சந்தித்த இயக்கம். சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வரக்கூடிய ஒரே இயக்கம் அ.தி.மு.க., மட்டும் தான்.
நமது வரலாறு படைத்து கொண்டிருக்கும் இயக்கம், தேர்தல் நேரத்தில் சிப்பாய்களாக இருந்து, எறும்புகள், தேனீக்கள் போல் சுறுசுறுப்பாக செயல்பட்டு, இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நினைவாக்க வேண்டும்.
மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் ஆட்சி அமைவதற்கு, அத்தனை நல்ல உள்ளங்களும், அத்தனை நிர்வாகிகளும் ஒன்றுபட்டு உழைத்து வெற்றி காண்போம். இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.
முன்னதாக இன்று காலை கோவை நகரில் நடை பயிற்சி மேற்கொண்ட இபிஎஸ், வழியில் தென்பட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடினார். சிறு வியாபாரிகள், பொதுமக்களுடன் இயல்பாக பேசி கருத்துக்களை கேட்டறிந்தார். கோவை அ.தி.மு.க., அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் இபிஎஸ் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.
200 தொகுதிகளில் திமுக., கூட்டணி வெல்லும் ஸ்டாலின் பகல் கனவு கண்டு கொண்டுள்ளார். அது நடக்காது. நீங்கள் செய்திருந்தால் தான் மக்கள் உங்களை பற்றி சிந்திப்பார். 50 மாத ஸ்டாலின் ஆட்சியில் எந்த பெரிய திட்டமும் கொண்டு வரப்பட்டு உள்ளதா.
இந்த ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. மக்கள், தங்களை தாங்களே பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. ரவுடியிசம் அதிகரித்துள்ளது. புகார் கொடுக்க சென்றவர்களையே ரவுடிகள் தாக்குகின்றனர்.