'சீட்'டுக்காக பழனிசாமி மச்சானை சுற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள்
'சீட்'டுக்காக பழனிசாமி மச்சானை சுற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள்
UPDATED : பிப் 13, 2026 10:03 AM
ADDED : பிப் 13, 2026 05:13 AM

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிட விரும்பும் நிர்வாகிகள், பழனிசாமியின் மச்சான் வெங்கடேஷை சுற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: வரும் மார்ச் முதல் வாரத்துக்குள், தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது. இதனால், பிப்., 24 ஜெயலலிதா பிறந்த நாளுக்கு முன், முதல் கட்டமாக 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய, பழனிசாமி தீவிரமாகி உள்ளார்.
ஜெயலலிதா இருக்கும் வரை, மன்னார்குடி குடும்பம் தேர்வு செய்யும் ஆட்கள் தான், வேட்பாளர் பட்டியலில் இடம் பெறுவர். இருப்பினும், மாவட்டச் செயலர்களிடம் இருந்து வரும் பட்டியலுக்கும் முக்கியத்துவம் கிடைக்கும்.
கடந்த 2021 தேர்தலில், மாவட்டச் செயலர்கள் பரிந்துரைத்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால், இம்முறை எல்லாமே தலைகீழாகி விட்டது. அதாவது, பழனிசாமியின் சொந்த மச்சான் வெங்கடேஷ் மற்றும் சேலம் புறநகர் மாவட்டச் செயலர் இளங்கோவன் தான், வேட்பாளர் தேர்வில் ஈடுபடுகின்றனர்.
அவர்கள் தேர்வு செய்தவர்களின் பட்டியல், பழனிசாமியின் மகன் மிதுன் கைகளுக்கு செல்கிறது. அவர் கை காட்டும் ஆட்கள் தான் வேட்பாளராக தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆனால், மிதுனை நேரடியாக பார்க்க வாய்ப்பில்லை. இதனால், வெங்கடேஷ், இளங்கோவனை, நிர்வாகிகள் சுற்றி வருகின்றனர்.
இதற்காக, சேலம் நெடுஞ்சாலை நகரிலும், சென்னையில் மியூசிக் அகாடமி அருகே உள்ள ஒரு ஹோட்டலிலும் தற்காலிக அலுவலகம் திறக்கப்பட்டு உள்ளது. அங்கு, ஏராளமான அ.தி.மு.க., நிர்வாகிகள் சீட் கேட்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

