ADDED : பிப் 04, 2026 06:28 AM

சென்னை: ''லாட்டரி விற்ற பணத்தில் தான், நடிகர் விஜயின் கட்சியே ஓடுகிறது,'' என்று, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்தார்.
சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:
'ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்' என்ற அரிச்சுவடியில் பயணிக்கும் அ.தி. மு.க.,வை பார்த்து, 'ஊழல் சக்தி' என த.வெ.க., தலைவர் நடிகர் விஜய் விமர்சிக்கிறார்.
நாட்டில், யார், யாரை விமர்சனம் செய்ய வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.
நடிகர் விஜய், சினிமாவில் வாங்கிய சம்பளம் வெள்ளையா... கருப்பா, வருமான வரி எவ்வளவு கட்டினார். இப்போதும், அவர் மீது வருமான வரி வழக்கு விசாரணை, நீதிமன்றத்தில் நடக்கிறது.
'இவ்வளவு தான் சம்பளம் வாங்கினேன்; இவ்வளவு வரி கட்டினேன்' என, விஜயால் எப்போதுமே சொல்ல முடியாது. ஏனெனில், அவர் வாங்கிய சம்பளத்தில் வெள்ளை குறைவு; வரி ஏய்ப்பு அதிகம்.
லாட்டரி விற்று செல்வம் குவித்த ஆதவ் அர்ஜுனாவின் பணத்தில் தான் விஜய் கட்சியே ஓடுகிறது. கரூரில் 41 உயிர்கள் பலியானதில், விஜய் மீதும் அரசு மீதும் தவறு இருக்கிறது.
ஆனால், கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல், கட்சியின் துவக்க நாளில் டான்ஸ் ஆடுகிறார் விஜய். ஈவு இரக்கமற்ற அவருக்கு, அ.தி.மு.க.,வை விமர்சிக்க அருகதை இல்லை.
அ.தி.மு.க., தான் கூட்டணிக்கு தலைமை. கூட்டணியில் எங்களுக்கு மேலே யாரும் இல்லை; எல்லாரும் கீழேதான். அ.தி.மு.க.,வுக்கும் தி.மு.க.,வுக்கும் இடையேதான் போட்டி. ஆனால், சினிமாவில் வரும் வடிவேலு காமெடி போல், 'நானும் ரவுடிதான்' என, ஜீப்பில் ஏற பார்க்கிறார் விஜய்.
ஆபத்தில் இருப்பவர்கள் தான் உதவி கேட்டு விசில் அடிப்பர். மக்களின் ஆதரவு இல்லாமல் த.வெ.க., ஆபத்தில் இருக்கிறது. அதனால் விசில் அடிப்பதற்காக, அதையே சின்னமாக கேட்டு வாங்கி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

