ADDED : நவ 02, 2025 01:42 AM

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தானில், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அளித்த பேட்டி:
நான், பன்னீர்செல்வம், செங்கோட்டையன் மூவரும் சந்தித்ததை அரசியல் நிகழ்வாக பார்க்கவில்லை; 'துரோகத்தை வீழ்த்த மூவரும் ஒன்றாக இணைந்திருக்கிறோம்' என்றுதான் செங்கோட்டையன் சொன்னார். கங்காரு குட்டியை மடியில் கட்டிப்பிடித்து இருப்பது போல, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பதவியை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்.
குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல, அ.தி.மு.க.,வை சின்னாபின்னமாக்கி வருகிறார். தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுக்கிறார். ஹிட்லர் போன்று சர்வாதிகார மனப்பான்மையில் உள்ளார். கொள்ளிக்கட்டையை எடுத்து தலையில் சொறிந்து கொண்டது போல், செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி உள்ளார்.
மற்றவர்களை பார்த்து துரோகி எனக்கூறும் தகுதிகூட அவருக்கு இல்லை. ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு தேவர் குருபூஜைக்கு, எங்களோடு வந்ததால், செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கிய துரோகத்தின் உருவம் பழனிசாமி.
அவருக்கு தென்மாவட்ட மக்கள், தேர்தலில் பதில் அளிப்பர். எங்களை 'பி' டீம் என சொல்லும் பழனிசாமிதான், 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வர காரணமானவர். கோடநாடு கொலை வழக்கை பற்றி பேசினாலே பதறுகிறார். அவரை வீழ்த்த, ஜனநாயக முறைப்படி, நாங்கள் எடுக்கும் ஆயுதத்தை பொறுத்திருந்து பாருங்கள்.
நேற்றைய அ.தி.மு.க., தற்போது இ.தி.மு.க., வாகி இருக்கிறது. அதாவது, ஏ.டி.எம்.கே., இல்லை; இனி இபிஎஸ்.டி.எம்.கே.,
இவ்வாறு அவர் கூறினார்.

