ஏர் இந்தியா விமான விபத்துக்கு யாரும் விமானியை குறை சொல்ல முடியாது: சுப்ரீம் கோர்ட்
ஏர் இந்தியா விமான விபத்துக்கு யாரும் விமானியை குறை சொல்ல முடியாது: சுப்ரீம் கோர்ட்
UPDATED : நவ 07, 2025 02:11 PM
ADDED : நவ 07, 2025 01:55 PM

புதுடில்லி: ''ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு யாரும் விமானியை குறை சொல்ல முடியாது. தன் மகனை குறை சொல்கிறார்களே என்ற வேதனையை, விமானியின் தந்தை சுமந்து கொண்டிருக்க தேவையில்லை,'' என்று வழக்கு விசாரணையின் போது சுப்ரீம்கோர்ட் நீதிபதி தெரிவித்தார்.
கடந்த ஜூன் 12ம் தேதி, குஜராத்தின் ஆமதாபாத்தில் 241 உயிர்களைப் பலிகொண்ட ஏர் இந்தியா விமான விபத்தில், பிரிட்டனை சேர்ந்த 40 வயது விஸ்வாஷ்குமார் ரமேஷ் மட்டுமே உயிர் பிழைத்தார்.
விமான விபத்து, விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கொண்ட குழு அமைக்கவும், விமான விபத்து பணியகம் தற்போது மேற்கொண்டு வரும் விசாரணையை முடிவுக்கு கொண்டு வரவும், மறைந்த பைலட் சுமீத் சபர்வாலின் தந்தை புஷ்கர் ராஜ் சபர்வால் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று (நவ., 07) நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் வாதிடுகையில், ''விபத்து குறித்து நீதித்துறை மேற்பார்வையிடப்பட்ட விசாரணையை நடத்த உத்தரவிட வேண்டும்'' என தெரிவித்தார்.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் இதழில் பெயர் குறிப்பிடாத இந்திய அரசு அதிகாரிகளை மேற்கோள் காட்டி, 'இந்த சம்பவத்திற்கு விமானியின் தவறு தான் காரணம்' என்று செய்தி வெளியிட்டுள்ளனர். இது பற்றி வழக்கு விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு பதில் அளித்த நீதிபதி பாக்சி, ''வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்று தெரிவித்தார்.
பின்னர் நீதிபதி சூர்யகாந்த் கூறுகையில், ''அது ஒரு மோசமான செய்தி. விமானியின் தவறு என்று இந்தியாவில் யாரும் நம்பவில்லை. ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு யாரும் விமானியை குறை சொல்ல முடியாது. எனவே விமானியின் தந்தை தன் மகனை குறை சொல்கிறீர்களே என்ற வேதனையை சுமந்து கொண்டு இருக்க தேவையில்லை. இது போன்ற சம்பவங்கள் குறித்து விசாரணை செய்வதற்கு குறிப்பிட்ட விதிகள் உள்ளது,'' என்றார்.
இதற்கு பதில் அளித்த மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன், ''விதி 9ன் கீழ் முதற்கட்ட விசாரணை மட்டுமே நடந்துள்ளது. இது குறித்து முறையான விசாரணையை நாங்கள் விரும்புகிறோம். விமான விபத்து விசாரணைகள் தொடர்பான சர்வதேச மரபுகளுக்கு இணங்க விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும், என்றார்.
பின்னர், இந்த மனு குறித்து பதில் அளிக்க கோரி, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

