ADDED : அக் 01, 2024 03:26 AM

சென்னை: இந்திய விமானப்படை தினத்தையொட்டி, சென்னையில் வான் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதால், விமானங்கள் இயக்கம் அட்டவணையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் குறித்து பயணியருக்கு, சென்னை விமான நிலையம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது.
விமான நிலையம் அறிக்கை:
இந்திய விமானப் படை தினத்தையொட்டி, தாம்பரம் மற்றும் மெரினா கடற்கரையில், விமான கண்காட்சி நடக்க உள்ளது. இதன் காரணமாக, அக்., 1 முதல் 8ம் தேதி வரை, சென்னை விமான நிலைய விமான பயண அட்டவணையில், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
விமானப்படை வான்வெளி சாகச நிகழ்ச்சி காரணமாக, சென்னை விமான நிலைய வான்தடம், 15 நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை, பல்வேறு இடைவெளிகளில் மூடப்படும்.
அக்., 1ம் தேதி மதியம் 1:45 மணி முதல் 3:15 மணி வரை மூடப்படும். மற்ற நாட்களில், கூடுதல் இடைவெளிகள் இருக்கும்.
எனவே, விமானப் பயண அட்டவணைகளை பயணியர் சரி பார்த்து, சமீபத்திய தகவல்களுக்கு, அவர்களின் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளவும். பயணியர் தங்கள் ஒத்துழைப்பை அளிக்கவும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.