போலீஸ் காவலில் அஜித்குமார் மரணம்: டி.எஸ்.பி., முன்ஜாமின் மனு தள்ளுபடி
போலீஸ் காவலில் அஜித்குமார் மரணம்: டி.எஸ்.பி., முன்ஜாமின் மனு தள்ளுபடி
ADDED : ஜன 07, 2026 08:55 PM

மதுரை: போலீஸ் காவலில், கோவில் காவலாளி அஜித்குமார் மரணம் அடைந்த வழக்கில் டி.எஸ்.பி.,சண்முகசுந்தரம் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் காவலில் மரணமடைந்த வழக்கில் டி.எஸ்.பி., சண்முகசுந்தரத்தின் முன்ஜாமின் மனுவை வாபஸ் பெற்றதால் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.பேராசிரியை நிகிதா காரில் அக்கோயிலுக்கு வந்தார். காரிலிருந்த நகை திருடுபோனது. அவர் திருப்புவனம் போலீசில் புகார் செய்தார்.
கோயில் காவலாளியாக இருந்த அஜித்குமாரை 2025 ஜூன் 27 ல் போலீசார் விசாரித்தனர். தனிப்படை போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார். இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கிறது. போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன், போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டனர்.
விசாரணை மதுரை 5 வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கில் மானாமதுரை டி.எஸ்.பி.,சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சிறப்பு எஸ்.ஐ.,சிவக்குமார், ஏட்டு இளையராஜா கூடுதல் எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.சங்கரமணிகண்டன், ஆனந்த், ராஜா, பிரபு உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:சம்பவத்தில் எங்களுக்கு தொடர்பு இல்லை.
ஆதாரம் இன்றி வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளோம். கைது செய்ததற்கான காரணங்களை குறிப்பிடவில்லை. 'காலவரையின்றி காவலில் வைத்திருக்க முடியாது,' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 1 முதல் காவலில் உள்ளோம். விசாரணை முடிந்து, கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜாமின் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.
டி.எஸ்.பி.,சண்முகசுந்தரம் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். சி.பி.ஐ.,தரப்பு வழக்கறிஞர் முகைதீன் பாஷா: இது ஜாமின் அனுமதிக்கக்கூடிய சாதாரண வழக்கல்ல. முக்கியத்துவம் வாய்ந்தது. உயர்நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடக்கிறது. ஜாமின் அனுமதித்தால் விசாரணையை பாதிக்கும். ஜாமின், முன்ஜாமின் அனுமதிக்கக்கூடாது. நீதிபதி: டி.எஸ்.பி.,யை ஏன்கைது செய்யவில்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.டி.எஸ்.பி.,சண்முகசுந்தரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முன்ஜாமின் மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார். அதை அனுமதித்த நீதிபதி முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார். ஜாமின் மனுக்கள் மீதான விசாரணையை நீதிபதி ஜன., 22க்கு ஒத்திவைத்தார்.

