வாக்காளர் பட்டியல் திருத்தம் எதிர்த்து வழக்கு: முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு
வாக்காளர் பட்டியல் திருத்தம் எதிர்த்து வழக்கு: முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு
UPDATED : நவ 02, 2025 02:55 PM
ADDED : நவ 02, 2025 10:48 AM

சென்னை: சென்னையில் இன்று (நவ., 02) வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அரசியல் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க, 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தமாகா, அமமுக, நாதக, தவெக உள்ளிட்ட 20 கட்சிகள் புறக்கணித்தன.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இதனையடுத்து, தலைமை தேர்தல் கமிஷன், தமிழகத்தில் உள்ள சட்டசபை தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலில் சிறப்பு சீர்திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்தல் கமிஷன், அனைத்து மாவட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு இதற்கான அறிவுரைகளை வழங்கியது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் வரும் நவம்பர் 4ம் தேதி தொடங்க உள்ள நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
யார் பங்கேற்பு? புறக்கணிப்பு?
இது தொடர்பாக, சென்னையில் இன்று (நவ 02) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அரசியல் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க, 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தமாகா, அமமுக, நாதக, தவெக உள்ளிட்ட 20 கட்சிகள் புறக்கணித்தன. அதேநேரத்தில், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூ., மதிமுக, மக்கள் நீதி மய்யம், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
முதல்வர் ஸ்டாலின் பேச்சு
கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உண்மையான வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான முயற்சியை பாஜ மேற்கொள்கிறது. வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிரான தமிழகத்தின் உணர்வை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். தேர்தலுக்கு குறுகிய காலமே இருக்கும் இந்நேரத்தில் வாக்காளர் திருத்தம் என்பது உண்மையான வாக்காளர்களை நீக்கும் நோக்கமே, இதனால் எதிர்க்கிறோம்.
மக்கள் வாக்குரிமையை பறிக்கும் விதமாகவும் அவர்களை அச்சுறுத்தும் விதமாகவும் பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்றது. அதுபோல தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற உள்ளது. இதற்கு எதிராக தமிழகம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது. நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் உரிய கால அவகாசத்தை கொடுக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
மநீம தலைவர் கமல்
கமல் பேசியதாவது: தேர்தல் கமிஷனின் அறிவிப்பில் உள்ள குறைகள் களையப்பட்டு, சுப்ரீம்கோர்ட்டின் வழிகாட்டுதலை வெளிப்படையாகக் கடைப்பிடித்து, உரிய அவகாசம் தந்து, 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பின்பு, எக்கட்சிக்கும் சார்பற்ற நிலையில் தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை நடத்த வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது அவசியம். ஆனால் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணியில் தேர்தல் கமிஷன் அவசரம் காட்டுவது ஏன்? நடுநிலைமையுடன் செயல்படுகிறோம் என்பதை தேர்தல் கமிஷன் உறுதி செய்ய வேண்டும். வாக்காளர் சிறப்பு திருத்தம் கொண்டு வருவதன் மூலம் தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை குறைந்து விட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் உண்மையான உள்நோக்கம் என்ன? இவ்வாறு கமல் கேள்வி எழுப்பி உள்ளார்.

