முழுக்க முழுக்க கோவை வளர்ச்சியே எங்கள் இலக்கு: அண்ணாமலை வாக்குறுதி
முழுக்க முழுக்க கோவை வளர்ச்சியே எங்கள் இலக்கு: அண்ணாமலை வாக்குறுதி
UPDATED : ஏப் 12, 2024 03:16 PM
ADDED : ஏப் 12, 2024 03:13 PM

கோவை: 'என் கனவு நமது கோவை' என்ற பெயரில் 100 வாக்குறுதிகள் 500 நாட்களில் நிறைவேற்றப்படும் என்ற வாசகத்துடன் கோவை லோக்சபா தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
முக்கிய வாக்குறுதிகள்
* தமிழகத்தில் 2வது ஐ.ஐ.எம்., கோவையில் நிறுவப்படும்.
* கோவையில் என்.ஐ.ஏ., மற்றும் என்.சி.பி., கிளை அலுவலகங்கள் அமைக்கப்படும்.
* கோவை தொகுதியில் 250 மக்கள் மருந்தகங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
* நாடு முழுவதும் உள்ள புராதனமான ஆன்மிக தலங்களுக்கு கோவையில் இருந்து 10 புதிய ரயில்கள் இயக்கப்படும்.
* காமராஜர் நினைவாக, அரசு மற்றும் தனியார் பங்களிப்போடு கோவை மாநகரில் 3 உணவகம் நிறுவப்படும்.
* கோவை மெட்ரோ திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
8 வழிச்சாலை
* கோவை - கன்னியாகுமரி, கோவை - திருவனந்தபுரம் (கொச்சி வழி) புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.
* கோவை - திருச்சி சாலை 6 வழிச்சாலையாக விரிவாக்கப்படும்.
* கோவை - கரூர் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* திருச்ச - அவிநாசி சாலைக்கு இடையே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிய பேருந்து முனையம் அமைக்கப்படும்.
* ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க 7 இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை.
* குளிர்சாதன வசதியுடன் கூடிய விவசாய ஏற்றுமதி மையம் ஏற்படுத்தப்படும்.
சர்வதேச விளையாட்டு மைதானம்
* கோவையில் தங்க நகை தயாரிப்பு பயிற்சி மையம் உள்ளடக்கிய ஆபரண தங்க நகை பட்டறை பூங்கா அமைக்கப்படும்.
* ஆனைமலை ஆறு நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும்
* உயர்தர புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை நிறுவப்படும்.
* கோவையில் 'கேலோ இந்தியா' திட்டம் மூலம் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்.
* மத்திய அரசின் 'பிரசாத்' திட்டத்தின் கீழ் கோவையின் பழமையான கோயில்கள் அனைத்தும் புனரமைக்கப்படும்.
* சர்வதேச தரத்தில் பாரம்பரிய அருங்காட்சியகம் நிறுவப்படும்.
* சுற்றுலா செல்லும் இளைஞர்களுக்காக இளைஞர் விடுதிகள் ஏற்படுத்தப்படும்.
சட்டசபை தேர்தலுக்கும் வாக்குறுதி
இத்துடன் 2026ல் தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி அமையும்போது நிறைவேற்ற உள்ள திட்டங்கள் பற்றிய வாக்குறுதியையும் அண்ணாமலை வெளியிட்டார். அதில், ''பிரதமரின் விவசாய கவுரவ நிதி ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும், டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்பட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும், போலீசாரின் ஊதியம் இரட்டிப்பாக்கப்படும்; வாரத்திற்கு ஒரு நாள் கட்டாய விடுமுறை அளிக்கப்படும், இந்து அறநிலையத்துறையின் கோயில்கள் மீதான அதிகாரம் மக்களிடம் வழங்கப்படும்'' ஆகிய வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
வாக்குவாதம்
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலையிடம், கோவையில் நேற்றிரவு 10 மணிக்கு மேல் விதிமீறி பிரசாரம் செய்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ''இரவு 10 மணிக்கு மேல் மக்களை சந்திக்க வேட்பாளர்களுக்கு உரிமை உள்ளது. 10 மணிக்கு மேல் மைக்கில் தான் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணைய விதி கூறுகிறது. நான் மைக்கை வைத்து பிரசாரம் செய்யும் வீடியோ இருந்தால் காட்டுங்கள்'' என்றார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலையிடம் வாக்குறுதிகள் குறித்து செய்தியாளர்கள் மாறி மாறி கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணாமலை, ''திமுக சொன்ன வாக்குறுதிகள் எல்லாம் என்னாச்சு என ஸ்டாலின், உதயநிதியிடம் போய் கேட்டீர்களா? அண்ணாமலைக்கு ஒரு மாதிரியும், ஆளும் கட்சிக்கு ஒரு மாதிரியும் பத்திரிகையாளர்கள் நடந்து கொள்கிறீர்கள். அறத்துடன் நடந்துக்கொள்ளுங்கள்'' என்றார். இதனையடுத்து, பத்திரிகையாளர்கள் அண்ணாமலையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

