திமுக உடன் தான் கூட்டணி; தவெகவுடன் பேச்சு என்பது வதந்தி; காங்., கிரிஷ் சோடங்கர் பேட்டி
திமுக உடன் தான் கூட்டணி; தவெகவுடன் பேச்சு என்பது வதந்தி; காங்., கிரிஷ் சோடங்கர் பேட்டி
ADDED : ஜன 03, 2026 01:18 PM

சென்னை: ''திமுக -காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. தவெகவுடன் பேச்சுவார்த்தை என்பது வதந்தி'' என தமிழக காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் தமிழக காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியதாவது: திமுக உடனேயே கூட்டணி செல்ல முடிவெடுத்து பேச்சு நடத்த குழு அமைத்துள்ளோம். ஒரு மாதத்துக்கு முன்பு இருந்தே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். திமுக உடன் நம்பகத்தன்மையுடன் கூடிய கூட்டணி உள்ளது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.
தேர்தல் தொடர்பாக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் பெற்று உள்ளோம். கூட்டணி உடன் அதிகாரப்பூர்வமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தவெக உடன் கூட்டணி என்ற தகவல் வதந்தி. ஜோதிமணி தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. இது போன்ற உட்கட்சி விவகாரங்கள் பொது வெளிக்கு செல்ல கூடாது.
தேர்தல் நேரங்களில் இதுபோன்ற கருத்துகள் மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும். ஜோதிமணியிடம் கருத்துக் கேட்டுள்ளோம். பிரச்னைகள் குறித்து அவர் எங்களிடம் தெரிவிக்கலாம். கரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளிடமும் விளக்கம் கேட்டுள்ளோம். அகில இந்திய தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. உட்கட்சி பிரச்னைகளை நிர்வாகிகள் பொதுத்தளத்தில் பகிர கூடாது. இவ்வாறு கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.

