ADDED : நவ 11, 2024 01:06 PM

சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புது விளக்கம் கொடுத்துள்ளார்.
வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தற்போது முதலே ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில், தி.மு.க.,வை தோற்கடித்து எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டு வரும் அ.தி.மு.க., இப்போதே கூட்டணி தொடர்பான கணக்குகளை போட ஆரம்பித்து விட்டது.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த இ.பி.எஸ்., 'ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். தேர்தல் சமயத்தில் தான் அது முடிவு செய்யப்படும்' என்று கூறினார். இதைத் தொடர்ந்து, பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி அமைக்கப்போவதாக தி.மு.க.,வினர் விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதற்கு பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது; பொதுவாக பிரதமர் மாநில முதல்வர்களை மட்டுமே சந்தித்து பேசுவது வழக்கம். ஆனால், ஒரு அமைச்சரான உதயநிதி பிரதமர் மோடியை எளிதில் சந்தித்து பேசி வருகிறார். இதன்மூலம், தி.மு.க., பா.ஜ., இடையே மறைமுக கூட்டணி இருப்பதை உணர முடியும். அதுபோன்ற நிலை அ.தி.மு.க.,வுக்கு கிடையாது. பா.ஜ.,வுடன் இப்போது மட்டுமல்ல, எப்போதும் கூட்டணி அல்ல.
இ.பி.எஸ்., சொன்ன ஒத்த கருத்து என்றால் என்ன? தி.மு.க.,வை தமிழகத்தில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும், என்ற ஒத்த கருத்து கொண்ட, பா.ஜ.,வை தவிர்த்து பிற கட்சிகளுடன் கூட்டணி என்பதைத் தான் அப்படி சொன்னார். அவர் சொன்னதை திரித்து, மாற்றி கூறி, அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். நிச்சயம் மக்கள் இதனை நம்ப மாட்டார்கள்.
பா.ஜ.,வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. எதிர்காலத்திலும் இதே நிலை தொடரும், எனக் கூறியுள்ளார்