ADDED : பிப் 10, 2024 07:32 AM

சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்குவதால், மாநிலம் முழுதும் சிறப்பு துார்வாரும் பணிக்கு, 115 கோடி ரூபாயை முன்கூட்டியே அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
வடகிழக்கு பருவ மழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார் மாவட்டங்கள் அதிகளவில் பாதிப்பை சந்திக்கின்றன.
எனவே, பருவ மழை துவங்குவதற்கு முன்னதாக, சென்னை மண்டல நீர்வளத்துறையில் உள்ள இம்மாவட்ட நீர்வழித்தடங்களில் துார்வாரும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இப்பணிக்கு ஆண்டுதோறும், 20 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்யப்படும். அதேபோல, திருச்சி மண்டல நீர்வளத்துறையில் உள்ள டெல்டா மாவட்டங்களிலும், ஜூன் மாதம் மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக துார்வாரும் பணி மேற்கொள்ள நிதி ஒதுக்கப்படுகிறது.
கோவை மற்றும் மதுரை மண்டலங்களிலும் துார்வாரும் பணிக்கு நிதி வழங்க வேண்டும் என, அரசிடம் வலியுறுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து, சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நடப்பாண்டு, டெல்டா மாவட்டங்களுக்கு, 95 கோடி; சென்னை மண்டலத்தில் கடலுார் மாவட்டத்திற்கு 15 கோடி; மதுரை மண்டலத்திற்கு 4 கோடி; கோவை மண்டலத்திற்கு 1 கோடி என 115 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிதியில் 5,814 கி.மீ.,க்கு நீர்வழித்தடங்கள் துார்வாரும் பணி விரைவில் துவங்க உள்ளது. 1,004 பணிகளாக பிரிக்கப்பட்டு ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யும் பணிகளில் நீர்வளத்துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.