பா.ஜ.,வில் இருந்து அமர் பிரசாத் விலகல்; கட்சி செயல்பாடு மீது கடும் விமர்சனம்
பா.ஜ.,வில் இருந்து அமர் பிரசாத் விலகல்; கட்சி செயல்பாடு மீது கடும் விமர்சனம்
ADDED : ஜூன் 11, 2026 07:04 AM

சென்னை: தமிழக பா.ஜ., செயலராக இருந்த அமர் பிரசாத் ரெட்டி, அக்கட்சியில் இருந்து விலகினார்.
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளரான அமர் பிரசாத் ரெட்டி, நேற்று, பா.ஜ.,வில் மாநில செயலர் பொறுப்பில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
அவர், அண்ணாமலை ஆரம்பித்துள்ள இயக்கத்தில், விரைவில் சேர உள்ளார்.
இந்நிலையில், தமிழக பா.ஜ., செயல்பாடுகளை விமர்சித்து, அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ள வீடியோவில், கூறியிருப்பதாவது:
தமிழக பா.ஜ., தலைவராக இருந்த தமிழிசை, தேர்தலில் நின்று தோல்வி அடைந்தார். ஆனால், அவரது உழைப்பை கவுரவப்படுத்தி, கவர்னர் பதவி வழங்கப்பட்டது. அப்போது, கட்சியின் ஓட்டு வங்கி, மூன்று சதவீதம்.
பின், மாநில தலைவரான முருகனும், தேர்தலில் நின்று தோல்வி அடைந்தார். அவருக்கு ராஜ்யசபா எம்.பி., மற்றும் மத்திய அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன.
அதன் பின், மாநில தலைவராக வந்த அண்ணாமலை, கடுமையாக உழைத்து, கட்சியின் ஓட்டு வங்கியை, 3 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தினார். கூட்டணிக்காக, அவரை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றினர்; அண்ணாமலைக்கு அங்கீகாரம் தரவில்லை.
எனவே, தமிழக பா.ஜ.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தி.மு.க., இருக்கிறது என்றால், நான்கைந்து பேர் கட்டுப்பாட்டில், தமிழக பா.ஜ., இருக்கிறது.
தோற்றாலும் லாபம் கிடைப்பதால், சிலர் தொடர்ந்து தோல்வி அடைந்தாலும், தேர்தலில் நிற்கின்றனர்.
ஆனால், பிரதமர் மோடி படத்தை ஒட்டியதற்காகவும், பா.ஜ., கொடியை ஏற்றியதற்காகவும் நான் கைது செய்யப்பட்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
