ஏப்.,12ல் தமிழகம் வருகிறார் அமித்ஷா: மதுரை, சிவகங்கையில் 'ரோடு ஷோ'வில் பங்கேற்கிறார்!
ஏப்.,12ல் தமிழகம் வருகிறார் அமித்ஷா: மதுரை, சிவகங்கையில் 'ரோடு ஷோ'வில் பங்கேற்கிறார்!
ADDED : ஏப் 10, 2024 04:17 PM

மதுரை: வரும் ஏப்.,12ல் மதுரை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மதுரை, சிவகங்கையில் 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
தமிழகத்தில் ஏப்.,19ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து முக்கிய தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்றும், இன்றும் (ஏப்.,9, 10) பிரதமர் மோடி சென்னை, வேலூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள் (ஏப்.,12) தமிழகம் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்.,12ம் தேதி மாலை 3:05 மணிக்கு மதுரை விமான நிலையம் வரும் அமித்ஷா, அங்கிருந்து சிவகங்கைக்கு ஹெலிகாப்டர் மூலமாக செல்கிறார். அங்கு மாலை 3:50 மணிக்கு பா.ஜ., வேட்பாளர் தேவநாதன் யாதவை ஆதரித்து 2 கி.மீ தூரம் 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் 5 மணிக்கு கோட்டை பைரவர் கோயில், ராஜராஜேஸ்வரி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் ஹெலிகாப்டரில் மதுரை திரும்புகிறார்.
மதுரையில் பா.ஜ., வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்து 2 கி.மீ தூரம் 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இரவு 7:30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்கிறார். பின்னர் மதுரை கோர்ட்யார்டு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்து, 13ம் தேதி காலை 8:30 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் கிளம்பி செல்கிறார்.

